புது ட்விஸ்ட்.. ஹத்ராஸ் கூட்ட நெரிசலின் பின்னணியில் சதியா? யோகி போட்ட அதிரடி உத்தரவு
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நேற்று நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 131 பேர் பலியாகி உள்ள நிலையில் பின்னணியில் சதி இருக்கிறதா? என்பது பற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமான சாமியாரில் ஒருவர் போலோ பாபா என்ற நாராயண் ஹரி. இவர் ஆன்மிக சொற்பொழிவு வழங்கி வருகிறார். நேற்று ஹத்ராஸின் சிகட்ராரு பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்தில் அவருடைய ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

இதில் போலோ பாபா பங்கேற்றார். இதில் 2.50 லட்சம் பேர் வரை பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டம் அதிகளவில் இருந்தது. அதன்பிறகு மாலை 3.30 மணியளவில் அவர் நிகழ்ச்சியை முடித்து விட்டு கிளம்பினார்.
அப்போது போலோ பாபாவை பார்க்கவும், அவருடைய காலடி மண்ணை சேகரிக்கவும் ஏராளமானவர்கள் ஓடினார்கள். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு நேற்று இரவு வரை 116 பேர் வரை பலியாகி இருந்தனர். இந்நிலையில் தான் இன்று 15 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை என்பது 131 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் 80 ஆயிரம் பேர் வருவார்கள் எனக்கூறி 2.50 லட்சம் பேர் குவிந்தது தான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் பலி தொடர்பாக கூறுகையில், ‛‛‛ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி ஆழமாக விசாரணை நடத்தி அது விபத்தா? இல்லை சதியா? என்பது பற்றி கண்டறியப்படும். இந்த சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நேரம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டிய சமயம். மேலும் அவர்களின் காயத்தை ஆற்ற வேண்டிய நேரம் இது. இந்த வேளையில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது'' என்றார். முன்னதாக யோகி ஆதித்யநாத் தனது இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. ஆக்ராவின் கூடுதல் டிஜிபி, அலிகாரின் டிவிஷனல் கமிஷனர் உள்ளிட்டடோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணையை தொடங்கி உள்ளது. முன்னதாக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேற்று சென்று தீவிர விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications