"யோகி ஆதித்யநாத் மே. வங்கத்தில் கால் வைத்தால்.."ஞானவாபி விவகாரம்! திரிணாமுல் மூத்த தலைவர் பாய்ச்சல்
லக்னோ: ஞானவாபி மசூதி விவகாரம் பேசுபொருள் ஆகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு திரிணாமுல் தலைவர் சித்திக் குல்லா சவுத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி.. இது அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு தரப்பினர் அங்கிருந்து விஷேஷ்வர் கோயிலை இடித்தே இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர். இது குறித்து வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வும் நடத்தப்பட்டது.
ஞானவாபி மசூதியில் தெற்கு பாதாள அறையில் உள்ள கற்பகங்களை வழிபடச் சமீபத்தில் தான் வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி அங்கே சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன. இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்திக் குல்லா சவுத்ரி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். யோகி ஆதித்யநாத் மேற்கு வங்கத்திற்கு வந்தால் அவரை சுற்றி வளைப்போம் என்று எச்சரித்துள்ளார். மேலும், இந்துக்கள் உடனடியாக ஞானவாபி மசூதியை காலி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஞானவாபி மசூதியில் பூஜைகளைத் தடை செய்யக் கோரி கொல்கத்தாவில் நடைபெற்ற ஜமியத் உலமா-இ-ஹிந்த் பேரணியில் கலந்து கொண்ட சவுத்ரி இந்த கருத்துகளைக் கூறினார். மேலும் அவர், "இதுபோன்ற செயல்களை அனுமதிக்கும் அம்மாநில முதல்வருக்கு அறிவு இருக்கிறதா.. அவர் மட்டும் மேற்கு வங்கத்திற்கு வந்தால் அவரை நகரக் கூட விட மாட்டோம்.. இந்துக்கள் இப்போது அங்கு வலுக்கட்டாயமாக வழிபடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் உடனடியாக ஞானவாபி மசூதியை காலி செய்ய வேண்டும்.
நாங்கள் எந்த கோவிலுக்கும் பிரார்த்தனை செய்யச் செல்வதில்லை.. அப்படியானால் எதற்காக எங்கள் மசூதிகளுக்கு வருகிறார்கள்? மசூதி என்றால் அது மசூதி தான்.. யாராவது மசூதியைக் கோவிலாக மாற்ற நினைத்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், ஞானவாபி மசூதி 800 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. அதை எப்படி இடிப்பார்கள்?" என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications