ரிங்கு சிங் திருமணம் திடீர் தள்ளிவைப்பு.. காரணத்தை பாருங்க! சமாஜ்வாதி எம்பியை கரம்பிடிப்பது எப்போது
லக்னோ: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கும், சமாஜ்வாதி கட்சியின் எம்பியான பிரியா சரோஜ் ஆகியோருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணம் நவம்பர் 18 ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் ரிங்கு சிங். இடது கை அதிரடி பேட்ஸ்மேன். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ரிங்கு சிங், பெண் எம்பியை திருமணம் செய்ய உள்ளார். அவரது பெயர் பிரியா சரோஜ். இவர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர். இவருக்கு வயது 25 தான் ஆகிறது. தற்போது அவர் உத்தர பிரதேசத்தின் மச்சிலிஷஹர் (Machhlishahr) தொகுதியின் எம்பியாக இருக்கிறார். பிரியா சரோஜின் தந்தை பெயர் துஃபானி சரோஜ். இவர் உத்தர பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர்.
ரிங்கு சிங்குவிற்கும், பிரியா சரோஜிக்கும் இடையே நட்பு இருந்தது. இந்த நட்பு சில ஆண்டுகளுக்கு பிறகு காதலாக மலர்ந்தது. இவர்களின் திருமண நிச்சயத்தார்த்தம் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. ரிங்கு சிங், பிரியா சரோஜ் ஆகியோர் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இந்த விழாவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், ஜெயா பச்சன் , முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரவீன் குமார், பியூஸ் சாவ்லா, உத்தர பிரதேச ரஞ்சி கிரிக்கெட் அணி கேப்டன் ஆர்யன் ஜுயல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இவர்களின் திருமணம் நவம்பர் 18ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் திடீரென்று ரிங்கு சிங் - பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களின் திருமணம் 3 மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரிங்கு சிங் பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் 2026 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதத்தில் திருமண தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இவர்களின் திருமணத்தை தாஜ் ஹோட்டலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இருவரின் குடும்பத்தினரும் தாஜ் ஹோட்டலில் புக்கிங் செய்தனர். ஆனால் தற்போது திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தாஜ் ஹோட்டல் பிப்ரவரி மாதம் தேவை என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிப்ரவரி மாதத்துக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த திடீர் திருமண தள்ளிவைப்புக்கு ரிங்கு சிங் தான் காரணம். தனது கிரிக்கெட் போட்டிகளை மனதில் வைத்து அவர் திருமணத்தை தள்ளிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications