பயங்கரம்! தந்தையிடம் இருந்து கைக்குழந்தையை பிடுங்கி.. 3வது மாடியில் இருந்து வீசி எறிந்த குரங்குகள்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ள சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக நாம் நகரமயமாக்கலை நோக்கி நகர்ந்து வருகிறோம். உலகில் அதிகப்படியான மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக உலகில் பல பகுதிகளில் காடுகள் மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் மனித- மிருக மோதல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மனித மிருக மோதல்
நம்ம ஊரிலும் கூட பல நேரங்களில் யானைகளின் வழித்தடங்களை நாம் ஆக்கிரமித்து வீடுகளை அமைப்பதால், யானைகள் ஊருக்குள் புகுந்துவிடும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. இப்படித்தான் வடமாநிலங்களில் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாகவே இருந்து வருகிறது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் நான்கு மாத ஆண் குழந்தை ஒன்றைக் குரங்குகள் தனது தந்தையிடம் இருந்து பிடுங்கி, வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரேலியின் துங்கா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக ஷாஹி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட போது, முதலில் போலீசாரே சற்று குழம்பிவிட்டனராம்.

குரங்குகள்
மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டின் மாடியில் குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு தந்தை நடந்து கொண்டு இருந்தார்.அப்போது சில குரங்குகள் திடீரென மாடியில் ஏறி தந்தையைத் தாக்கத் தொடங்கி உள்ளன. முதலில் தந்தைக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. பின்னர் நிலைமையை உணர்ந்து, குரங்களை விரட்ட முயன்று உள்ளார்.

பிடுங்கிய குரங்குகள்
ஆனால், குரங்கள் அதிக எண்ணிக்கையும் ஆவேசமாகவும் இருந்ததால் தந்தையால் அவற்றைச் சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து குடும்பத்தினரிடம் உதவி கேட்டுக் கத்தி உள்ளார். இருப்பினும், குடும்பத்தினர் வரும் வரை குரங்குகள் அவரை சும்மா விடவில்லை. அப்போது தான் அந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. தந்தையின் கையில் இருந்த குழந்தையை அந்த குரங்குகள் பிடுங்கி உள்ளன.

குழந்தை உயிரிழப்பு
குரங்கள் மாடியில் இருந்து அந்த குழந்தையைக் கீழே எறிந்துள்ளன. மூன்றாவது மாடியில் இருந்து குரங்குகள் எறிந்ததில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்ற குடும்ப உறுப்பினர்கள் அங்கே வந்தபோது, அவர்களையும் குரங்குகள் தாக்கி உள்ளன. அவர்களைக் குரங்குகள் கடித்தும் உள்ளன. அன்றைய தினம் தான் அந்த குழந்தைக்குப் பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

விசாரணை
அதற்கு முன்பாக குழந்தை அழுததால் சமாதானம் செய்யத் தந்தை மாடிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர், அதேபோல பரேலி வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications