உ.பியில் 50 பசு மாடுகள் மர்மமாக உயிரிழப்பு. . "விசாரணைக்கு உத்தரவிட்ட யோகி". . என்னாச்சு?
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் மர்மமான முறையில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்த நிலையில், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்புர் பகுதியில் கோசாலைகள் அமைந்துள்ளன.
இந்த கோசாலைகளில் பராமரிக்கப்படும் பசு மாடுகளில் 50-க்கும் மேற்பட்டவை அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தன. இது குறித்த தகவல் அறிந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அலுவலர் இடைநீக்கம்
மேலும், கால்நடைத்துறை அமைச்சர் தரம் பால் சிங்கை உடனடியாக, அம்ரோ சென்று அங்குள்ள சூழலை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அம்ரோஹா மாவட்ட மாஜிஸ்திரேட்டு பிகே திரிபாதி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''மாலை தீவனத்தை சாப்பிட்ட பிறகு மாடுகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்தாலும் 50க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன.

முதல்வர் உத்தரவு
தாஹிர் என்ற நபரிடம் இருந்துதான் மாடுகளுக்கு தீவனங்கள் வாங்கப்பட்டன. எனவே, அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாஹிரை கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கோசாலைகளுக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்விட்டர் பக்கத்தில் இவ்விவகாரம் தொடர்பாக வெளியிட்ட ட்விட் பதிவில் "கால்நடைத்துறை அமைச்சரை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செல்லுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடும் நடவடிக்கை
உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள மாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாடுகள் உயிரிழந்த விவகாரத்தில் யார் மீதேனும் தவறு இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் தப்ப முடியாது எனக் கூறியதாக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தோல் கழலை நோய் காரணமாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் மாடுகள் கொத்து கொத்தாக உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக கடந்த ஏப்ரல் மாதம் இந்த நோய் மாடுகள் மத்தியில் பரவியதாக சொல்லப்படுகிறது.

ஒரு லட்சம் மாடுகளுக்கு நோய் பாதிப்பு
எதிர்ப்பு சக்தி குறைந்த கால்நடைகளின் உயிரை குடிக்கும் இந்த நோயால், ராஜஸ்தானில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. கிட்டத்தட்ட ஓரு லட்சம் மாடுகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ராஜஸ்தான் அரசு, மத்திய அரசின் உதவியையும் நாடியுள்ளது. அதேபோல் குஜராத்திலும் தோல் கழலை நோயால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, மாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல குஜராத் அரசு தடை விதித்துள்ளது. மாடுகளுக்கு இடையே பரவும் இந்த நோய் பரவலை தடுக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications