மும்பை டூ அயோத்தி.. ராமர் கோயில் நோக்கி 1,427 கிமீ நடந்து வரும் ஷப்னம்! என்ன காரணம் தெரியுமா?
லக்னோ: அயோத்தி ராமர் கோயில் நோக்கி மும்பையை சேர்ந்த ஷப்னம் என்ற பெண் ஒருவர் சுமார் 1400 கிலோ மீட்டர்கள் தூரம் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
நாளை அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்பதற்காக ஏராளமான இந்து மத பக்தர்கள், சாமியார்கள் அயோத்தியில் திரண்டு உள்ளனர். அதேபோல் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், இந்து மகா சபா போன்ற இந்துத்துவ அமைப்பினரும் அதன் தலைவர்களும் அங்கு படையெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் ஷப்னம் என்ற பெண் ஒருவர் அயோத்தி ராமர் கோயிலும் நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதுவும் 1,425 கிலோ மீட்டர் தூரம்.

ஷப்னம் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையை சேர்ந்தவர். பிறப்பால் இஸ்லாமியரான இவர் ராமர் மீது கொண்ட பக்தியின் காரணமாக இவ்வாறு வந்து உள்ளார். அவருடன் அவரது ஆண் நண்பர்கள் ராமன்ராஜ் ஷர்மா மற்றும் வினீத் பாண்டே ஆகியோரும் மும்பையில் இருந்து அயோத்திக்கு நடைபயணம் வந்து இருக்கிறார்கள். இது குறித்து ஷப்னம் தெரிவிக்கையில், "இஸ்லாமியராக நான் இருந்தாலும் ராமர் மீது அசைக்க முடியாத பக்தி எனக்கு உள்ளது. ராமரை வணங்க இந்து மதத்தவராக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நல்ல மனிதராக இருப்பதே முக்கியம்.
நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் வரை நாங்கள் நடக்கிறோம். நம்பிக்கையின் பயணமாகவே நான் இதை பார்க்கிறேன். நாங்கள் செல்லும் வழியில் எங்களை பார்ப்பவர்கள் பேசி விசாரிக்கிறார்கள். புகைப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்கள் பதிவு செய்கின்றனர். பல்வேறு பகுதிகள் காவல் துறையினர், பொதுமக்கள் பாதுகாப்பு வழங்குகிறார்கள். உணவையும், தங்கும் இடத்தையும் அளித்தார்கள். எனக்கு எதிராக வரும் கருத்துக்களுக்கு நாங்கள் பொருட்படுத்தவில்லை." என்றார்.
தலையில் ஹிஜாப் அணிந்தபடி ராமர் உருவம் அச்சிட்ட காவிக் கொடியுடன் ஷப்னம் நடந்து செல்லும் புகைப்படங்கள் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ராமர் கோயில் கட்டும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நாளை கோயில் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications