அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் எப்போது முதல் தரிசிக்கலாம்? தரிசன நேரம், முன்பதிவு செய்வது எப்படி?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கோயிலில் எப்போது முதல் தரிசனம் செய்யலாம்.. தரிசன நேரம் என்ன என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதைப்பற்றி பார்க்கலாம்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கோவில் கட்டும் பணிக்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தா சேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கோவில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.

உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் கோவில் கட்டுமான பணிகள் நடந்தது. நாகரா பாணியில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக பிரமாண்டமாக அமைந்துள்ளது. கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது ஆகும். கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த பிரமாண்ட கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை உள்ளிட்டவை இன்று நண்பகல் 12.20 மணிக்கு நடைபெறுகிறது.
அயோத்தி ராமர் கோவில்: கும்பாபிஷேகத்தையொட்டி 7 நாள் பூஜைகள், சடங்குகள் கோவிலில் தொடங்கியது. கடந்த 17 ம் தேதி கோவில் கருவறையில் 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை தான் இன்று பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. கோவில் கருவறையில் உள்ள சிலைக்கு இன்று அர்ச்சகர்கள் பூஜை, சடங்குகள் செய்கின்றனர். இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கு சடங்குகள் செய்ய உள்ளார்.
பொதுமக்கள் வரவேண்டாம்: ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என சமூகத்தில் பல்வேறு தரப்பிலும் உள்ள பலருக்கும் ராமர் கோவில் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அன்று பொதுமக்கள் வரவேண்டாம் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
தரிசன நேரம் எப்போது: அதன்படி, கும்பாபிஷேக நாளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பொதுமக்கள் எப்போது முதல் ராமர் கோயிலில் தரிசனம் செயய் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விவரம் வெளியாகியிருக்கிறது. அதாவது, தரிசன நேரம் அயோத்தி பால ராமரை பக்தர்கள் நாளை முதல் தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 ஆம் தேதி முதல் காலை காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும்,
முன்பதிவு வசதி: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம். காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். இதில் கலந்து கொள்ள https://srjbtkshetra.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். தற்போது முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்படவில்லை. ஓரிரு தினங்களில் இந்த வசதி வரும் எனத் தெரிகிறது.
இதே இணையதளத்தில் பொது மக்கள் நன்கொடை அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கோயில் திறக்கப்பட்ட பிறகு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் நள்ளிரவு வரை தரிசன நேரத்தை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications