உ.பி.யில் வேகமெடுக்கும் வளர்ச்சி.. மெட்ரோ ரயில், சாலை திட்டங்களுக்கு ரூ.55 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
இந்த பட்ஜெட்டில் மற்ற அனைத்து துறைகளை காட்டிலும் கல்விக்கும், வளர்ச்சி திட்டங்களுக்குமே அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அங்கு மெட்ரோ ரயில், எக்ஸ்பிரஸ் வே உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.55,000 கோடியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பாண்டு பட்ஜெட்டில், இந்த நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்த பட்ஜெட்டில் மற்ற அனைத்து துறைகளை காட்டிலும் கல்விக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்குதான் அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

முதன்மை மாநிலமாக மாற்ற..
இந்தியாவை பொறுத்தவரை கல்வி, சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட குறியீடுகளில் எப்போதுமே தென் மாநிலங்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றன. வட மாநிலங்கள் இந்தக் குறியீடுகளில் பின்தங்கியே இருக்கின்றன. அதிலும் உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் இதில் மோசமான இடத்தில் இருக்கின்றன. இந்நிலையில், உத்தரபிரதேசத்தை அனைத்து நிலைகளிலும் முதன்மையான மாநிலமாக கொண்டு வருவோம் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் அறிவித்தார். அந்த வகையில், அதற்கு தேவையான நடவடிக்கைகளில் உ.பி. அரசு சமீபகாலமாக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

ரூ.55 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
இதனிடையே, கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மற்ற அனைத்து துறைகளை காட்டிலும் கல்விக்கும், வளர்ச்சி திட்டங்களுக்குமே அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மெட்ரோ ரயில், புதிய சாலைகள், சாலை விரிவாக்கம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டும் ரூ. 55,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளே அதன் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்பதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியாக இருக்கிறார்.

புதிய விமான நிலையங்கள், துறைமுகங்கள்..
அதன்படி, அடுத்த ஒருசில ஆண்டுகளுக்குள் உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் மெட்ரோ ரயில் போன்ற நவீன போக்குவரத்து வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, மாநிலத்தில் உள்ள முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையிலான சாலைகள், எக்ஸ்பிரஸ் வே சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், புதிய விமான நிலையங்கள் துறைமுகங்கள், ஏற்றுமதி - இறக்குமதி மையங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாவை மேம்படுத்த..
முக்கியமாக, உத்தரபிரதேசத்தில் உள்ள ஆன்மிக சுற்றுலா தலங்களை அனைத்த பகுதிகளுடனும் இணைக்கும் வகையில் புதிய சாலைகளை அமைக்கும் பணி அங்கு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொழில் நகரங்களை இணைக்கும் சாலைகளை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கான்பூர் மற்றும் ஆக்ரா நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்ககளுக்கு முறையே ரூ.585 கோடி, ரூ.465 கோடி செலவிடப்படவுள்ளது. டெல்லி - காஸியாபாத் - மீரட் எக்ஸ்பிரஸ் வே சாலைக்கு ரூ.1,300 கோடி உ.பி. அரசு ஒதுக்கியுள்ளது.

1 டிரில்லியன் டாலர் இலக்கு
வரும் 2027-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை (ரூ.350 லட்சம் கோடி) இந்தியா எட்டுவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதில், தனது பங்களிப்பாக நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார். அந்த வகையிலேயே, உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications