ஹத்ராஸ் சம்பவம்.. உண்மையை வெளியே கொண்டு வரும் பத்திரிகையாளர்களை தடுப்பதா?.. கனிமொழி கண்டனம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹாத்ராஸில் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தலித் பெண் ஒருவர் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் உள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி அந்த பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டவுடன் அந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் உத்தரப்பிரதேச போலீஸாரே எரித்தனர்.

இறந்த பெண்
இதற்கு கண்டனங்கள் வலுக்கின்றன. இதுகுறித்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எனக்கு அருகில் எரிந்து கொண்டிருப்பது ஹத்ராஸில் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த பெண்ணின் உடலாகும்.

பெண் உடல்
இந்த இறுதிச் சடங்கில் பெண்ணின் குடும்பத்தினர் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்களை வீட்டுக் காவலில் வைத்து போலீஸார் தடுத்தனர். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் அந்த பெண்ணின் உடலை எரித்தனர். அங்கே எரிந்து கொண்டிருப்பது என்னவென கேட்டதற்கு, போய் மாவட்ட நீதிமன்ற நீதிபதியிடம் கேளுங்கள் என போலீஸார் கூறுகிறார்கள் என அந்த பெண் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி கனிமொழி
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அது போல் திமுக எம்பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ்
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஹத்ராஸ் வழக்கில் உண்மையை வெளிக் கொண்டு வருவதிலிருந்து பத்திரிகையாளர்கள் தடுக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண் பத்திரிகையாளர் தனுஸ்ரீ பாண்டேவையும் எதிர்க்கட்சியினரையும் அங்கு செல்வதிலிருந்து தடுப்பதற்கு பதில் இந்த பிரச்சினைக்கு உத்தரப்பிரதேச அரசு தீர்வு காண வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினர் கண்டனத்தை அடுத்து ஹத்ராஸ் பகுதிக்குள் நுழைய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications