நாடே கொண்டாடிய ஆசிரியர் தினம்.. உபி பள்ளியில் நடுநடுங்க வைத்த நிகழ்வு! தலித் மாணவனுக்கு நடந்த கொடுமை
லக்னோ: இரு சக்கர வாகனத்தை தொட்ட காரணத்தால் பட்டியல் சமுதாய மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு நேற்று முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்தன. பலரும் தங்களுக்கு ஆசிரியர்களை நினைவுகூர்ந்து பதிவுகளை வெளியிட்டனர்.

உபி அரசு பள்ளி
மத்திய மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கினர். இப்படி நேற்று ஆசிரியர்களின் மேன்மையை நாடே போற்றிக்கொண்டிருந்தபோது, உத்தரப்பிரதேச பள்ளியில் அரங்கேறிய கொடுமை வெளியானது. அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரியும் நபர் செய்த செயல் மொத்த ஆசிரியர்களையும் கலங்கப்படுத்தி இருக்கிறது.

6ம் வகுப்பு மாணவன்
உத்தரப்பிரதேசத்தின் பாலியா பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வரும் 11 வயது மாணவன் திடீரென பள்ளி நேரம் முடிவதற்கு முன்பாகவே வீட்டிற்கு சென்று இருக்கிறார். ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தாய் என தாய் விசாரித்தபோது பள்ளியில் தனக்கு நடந்த கொடுமையை விவரித்து உள்ளார் அந்த சிறுவன்.

தீண்டாமை
அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் 43 வயதான மணிராம் சிங், என்பவரின் இருசக்கர வாகனத்தை தான் ஓய்வு நேரத்தில் தொட்டதாகவும் இதை பார்த்த ஆசிரியர் தன்னை கொடூரமாக தாக்கியதாகவும் தெரிவித்து இருக்கிறார். தன்னை ஆசிரியர் அறைக்குள் அடைத்து வைத்து துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாய் புகார்
இதுகுறித்து காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் புகாரளித்தார். அப்போது தனது மகனை ஆசிரியர் அறைக்குள் அடைத்து வைத்து தாக்கியதுடன் சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் கூறியுள்ளார். ஆசிரியரின் இந்த செயல் தொடர்பாக தான் பள்ளி முதல்வரிடம் புகாரளித்ததாகவும் ஆனால், அவர் கண்டுகொள்ளாததால் போலீசில் புகாரளிப்பதாகவும் கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு
போலீசார் நடத்திய விசாரணையில் மாணவனின் தந்தை குஜராத் மாநிலத்தில் கூலித் தொழில் செய்துவருவது தெரியவந்து இருக்கிறது. ஆசிரியர் மாணவனை சாதி பெயர் சொல்லி திட்டி தாக்கியதை உறுதி செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications