ஸ்பீடெடுக்கும் கொரோனா பரவல்.. தடுப்பு நடவடிக்கையில் உ.பி. சுகாதாரத்துறை தீவிரம்: யோகி அரசு தந்த ஐடியா
லக்னோ: கொரோனா தொற்று பரவல் வட இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், இதனை தடுக்க போதுமான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. சுமார் 40% வரை திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் நாடு முழுவதும் சுமார் 3,016 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரமாக இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில சுகாதாரத்துறையை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில்தான் உத்தரப் பிரதேச அரசு தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாசிட்டிவாக வரும் அனைத்து டெஸ்ட் சாம்பில்களையும் மரபணு வரிசைமுறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிட் தொற்றை சமாளிக்கும் அளவுக்கு மருத்துவ உபகரணங்கள், பிபிஇ கிட்கள், கையுறை, முக கவசம், மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை தேவையான அளவு கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான பிரத்யேக வார்டுகள் உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இதனை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிட் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளை தீவிரப்படுத்த சில வழிக்காட்டுதல் நெறிமுறைகளையும் யோகி ஆதித்யநாத் அரசு வழங்கியுள்ளது. இந்த பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்த நபர்களின் மாதிரியானது மரபணு வரிசைப்படுத்தலுக்கு லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட இருக்கிறது.
அனைத்து மாவட்டங்களிலும் சுவாசக்குழாய் தொற்று, இன்ஃப்ளூயன்ஸா, கடுமையான சுவாச நோய் தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கௌதம் புத்த நகரில் 57, காசியாபாத் 55, லக்கிம்பூர் கெரியில் 44, லக்னோவில் 27, பிஜ்னோரில் 12, லலித்பூர் 9 மற்றும் சஹரன்பூர் 8 என இநத மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. எனவே இம்மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த கோரோனா அலையின் போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்கள் கூறுகையில், "தற்போது மாநில அரசு பின்பற்றி வரும் யோசனை மிகச் சிறந்ததாகும். கடந்த கொரோனா அலையின் போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவனம் செலுத்துவது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போன்றது. இந்த ஐடியா நிச்சயம் தொற்று பாதிப்பை தடுத்து நிறுத்தும" என்று கூறியுள்ளனர். ஏற்கெனவெ புதிய திட்டங்கள் மூலம் உ.பி மக்களிடைய நன்மதிப்பை பெற்றுள்ள யோகி அதித்யநாத் அரசு தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications