தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி.. மத்திய கல்வித்துறை அமைச்சர் தடாலடி!
லக்னோ: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு தேவையான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் எனில், புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கையும், 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் முன்மொழியப்பட்டிருக்கிறது. இதனை தமிழக அரசு நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம் 3.O நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது, "தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கான கல்வி நிதி விடுவிக்கப்படும். கல்விக்கொள்கையை ஏற்கவில்லையெனில் ரூ.2000 கோடியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது" என்று கூறியுள்ளார்.
பிரச்சனை என்ன?
மும்மொழிக் கொள்கை, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடுவது, உயர்கல்விக்கான மானியத்தை குறைப்பது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் கல்வியில் சமூகநீதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது உள்ளிட்டவை புதிய கல்விக்கொள்கையின் முக்கிய பிரச்சனைகளாக இருக்கின்றன.
அதாவது 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. நாட்டில் கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைக் கட்டுப்படுத்தவும் தான் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அதன் முக்கிய அம்சமே எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது தான். அப்படி இருக்கையில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதை கல்வியாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், "மாணவர்கள் புதிய மொழியை கற்றுக்கொள்ள வசதியாக மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மூன்றாவது மொழியை விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறினாலும் கூட, அது தொடர்பான மத்திய அரசின் விதிகளில் சமஸ்கிருதத்திற்குதான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அதனால், மும்மொழிக் கொள்கை என்பது சமஸ்கிருதத் திணிப்பாகவே அமையும். பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் திறமையை மட்டும் மதிப்பிடாமல், புலமையும் சேர்த்து மதிப்பிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமைகள் தேர்வு மற்றும் அதில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால், புலமை எவ்வாறு மதிப்பிடப்படும் என்பது தெரியவில்லை. இது முறைகேடுகளுக்குத் தான் வழிவகுக்கும்.
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முறைக்கு 15 ஆண்டுகளில் முடிவு கட்டப்படும் என்றும், அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை தன்னாட்சி வழங்குவது நல்லது. ஆனால், தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் இணைப்பு பெற்று அவற்றின் மேற்பார்வையில் செயல்படுவது தான் சரியானதாக இருக்கும். தனியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அளித்தால் விதிமீறல்களும், முறைகேடுகளும் அதிகரிக்கும்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களைக் கூறி ஏற்கனவே கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நுழைவுத் தேர்வு என்பது அவர்களை உயர்கல்வியில் நுழையவிடாத தேர்வாக அமைந்துவிடும். இத்திட்டத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தி வந்திருக்கின்றனர். இப்படி இருக்கும்போது இந்த கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது விவாதங்களை தீவிரமாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications