உ.பி.யில் இருந்து இத்தனை பிரதமர்கள்.. அடடே சுவாரசியம்
லக்னோ: அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம்தான் பிரதமர்கள் உட்பட விவிஐபிக்களை அதிகம் வெற்றி பெற வைத்திருக்கிறது.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
5-ம் கட்டமாக 51 தொகுதிகளுக்கு நாளை திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னோ உள்ளிட்ட 14 தொகுதிகளும் அடங்கும்.

நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு, உத்தரப்பிரதேசத்தின் புல்புர் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வென்றிருந்தார். அவரைத் தொடர்ந்து விஜயலட்சுமி பண்டிட் 2 முறையும் வி.பி.சிங் ஒருமுறையும் இத்தொகுதியில் வென்றிருக்கின்றனர். 1980களுக்குப் பின்னர் காங்கிரஸிடமிருந்து ஜனதா தளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கைகளுக்கு இத்தொகுதி மாறியது. இங்குதான் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போட்டியிட்டது அலகாபாத் தொகுதி. அலகாபாத்தில் 2 முறை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் போட்டியிட்டு வென்றிருக்கிறார். அமிதாப்பச்சன், முரளிமனோகர் ஜோஷி ஆகியோரும் அலகாபாத் மாஜி எம்.பி.க்கள்தான்.
காங்கிரஸின் கோட்டையான ரேபரேலி கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கிறது. 1967 முதல் 1977 வரை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வசம் இத்தொகுதி இருந்தது. இத்தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 4 முறை எம்.பி.யாக வென்றிருக்கிறார்.
நேரு குடும்பத்தின் இன்னொரு கோட்டையாக இருப்பது அமேதி. 1980-ல் சஞ்சய் காந்தியும், அவரைத் தொடர்ந்து ராஜீவ் காந்தியும் இத்தொகுதியை தக்க வைத்தனர். 1999 தேர்தலில் சோனியா காந்தி இத்தொகுதி எம்.பி.யானார். அதன் பின் 3 முறை ராகுல் காந்தி வசம் அமேதி இருந்து வருகிறது.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் 1977 முதல் 2004 வரை தம் வசம் வைத்திருந்த பால்லியா தொகுதியும் உ.பி.தான். அவரது மகன் நீரஜ் சேகர் 2 முறை இத்தொகுதியை தன் வசம் வைத்திருந்தார்.
2009-ல் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வசம் இருந்த வாரணாசி தொகுதியை இப்போது பிரதமர் மோடி கைப்பற்றியிருக்கிறார், இம்முறையும் பிரதமர் மோடியே அத்தொகுதியில் களம் காண்கிறார்.












Click it and Unblock the Notifications