உ.பி. சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் மஜ்லிஸ் கட்சி போட்டி- ஓவைசி திட்டவட்டம்
லக்னோ: உ.பி. சட்டசபை தேர்தலில் மஜ்லிஸ் கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உ.பி. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் தனித்தே களம் காண்கின்றன. இந்த கட்சிகளுடன் தமது கட்சியும் போட்டியிடும் என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி அறிவித்திருந்தார்.
2017-ம் ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் 38 இடங்களில் மஜ்லிஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட அந்த கட்சியால் வெல்ல முடியாமல் போனது. 2017 தேர்தலில் பாஜக 312 இடங்களில் வென்றது. சமாஜ்வாதி கட்சி 47 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 19, காங்கிரஸ் 7 இடங்களிலும் வென்றன.
திருச்சி எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் 4 பேர் கைதானது எப்படி?.. சிக்கிய முக்கிய ஆதாரம்.. பரபரப்பு தகவல்கள்
களத்தில் மஜ்ஸ்லிஸ் கட்சி
அடுத்த ஆண்டு தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் பாஜகவுக்கு 100 இடங்கள் குறைவாகவே கிடைக்கும்; ஆனாலும் பெரும்பான்மைக்கு தேவையான 202 இடங்களைவிட கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்கின்றன. இந்த நிலையில் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறிவைத்து ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் களமிறங்குவதாக அறிவித்துள்ளது.
முஸ்லிம் வாக்காளர்கள்
தற்போதைய சூழ்நிலையில் உ.பி.யில் 110 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் 30-39% வரை உள்ளனர்; 44 தொகுதிகளில் 40-49%, 11 தொகுதிகளில் 50-65% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்தே ஓவைசி கட்சி களமிறங்குகிறது. மொத்தம் 100 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக ஓவைசி அறிவித்திருக்கிறார்.
100 தொகுதிகளில் போட்டி
பொதுவாக இஸ்லாமியர்கள் வாக்குகளை காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் பிரித்துக் கொள்ளும். ஆனால் இம்முறை ஓவைசி கட்சியும் 100 தொகுதிகளில் போட்டியிடுவதால் இந்த கட்சிகளுக்கான வழக்கமான வாக்குகள் கிடைக்குமா? அல்லது அனைத்து எதிர்க்கட்சிகளையும் அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் ஓவைசி கட்சியே முஸ்லிம் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்யுமா? என்பது எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.
அடுத்தடுத்த மாநிலங்கள்
தெலுங்கானாவை சேர்ந்த ஓவைசி கட்சிக்கு அம்மாநில சட்டசபையில் 7 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மகாராஷ்டிராவில் 1 லோக்சபா தொகுதியில் வென்றது; பீகாரில் 5 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உ.பி. உள்ளாட்சி தேர்தல்களையும் எதிர்கொண்டது ஓவைசி கட்சி. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் கவனம் செலுத்துவதாக அறிவித்திருக்கிறது ஓவைசி கட்சி. இந்த சூழ்நிலையில் உ.பி.யில் ஓவைசி கட்சி எப்படியான தாக்கத்தை உருவாக்கும் என்பது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.