உ.பி.:யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா- ஹரித்வார் சென்று திரும்பிய அகிலேஷ் யாதவுக்கும் தொற்று பாதிப்பு!
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தம்மை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தமது ட்விட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் உச்சகட்டமாக உள்ளது. அதேநேரத்தில் கும்பமேளா காலம் என்பதால் ஹரித்வாரில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி வருகின்றனர் .

வாரணாசியில் பெரும் கூட்டம்
ஹரித்வார் செல்ல முடியாதவர்கள் கங்கை நதிகளில் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு புனித நீராடுகின்றனர். இதனால் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி (காசி) மக்கள் கூட்டத்தால் அலைமோதுகிறது. இங்கேயும் கொரோனா கால கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

முதல்வருக்கு கொரோனா
உத்தரப்பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநில அரசு அதிகாரிகள் பலருக்கும் தொற்று அதிகரித்திருப்பதாக தெரியவந்தது. இதனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தம்மை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் யோகி ஆதித்யநாத்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அவர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார்.

பாஜக அரசு மீது அமைச்சர் விமர்சனம்
ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மோசம் என மாநில அமைச்சர் பகத் கடுமையாக விமர்சித்திருந்தார். உத்தரபிரதேசத்தின் சுகாதார துறை சீர்குலைந்து போய்விட்டது எனவும் சாடி இருந்தார். இப்போது மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தையே கொரோனா தாக்கி இருக்கிறது.

ஹரித்வாரில் அகிலேஷ் யாதவ்
இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் சென்றார் அகிலேஷ். அங்கு சாதுக்கள் அமைப்பின் கூட்டமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத்தின் தலைவர் நரேந்திர கிரியை சந்தித்து அகிலேஷ் யாதவ் பேசியிருந்தார்.

அகிலேஷுக்கும் கொரோனா
இந்நிலையில் நரேந்திர கிரிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஹரித்வார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அகிலேஷ் யாதவும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications