இரட்டை இஞ்சினா.. இரட்டை ஊழலா..? யோகி ஆதித்யநாத்திற்கு அகிலேஷ் யாதவ் நறுக் கேள்வி
லக்னோ: இரட்டை இஞ்சின் என்று உத்தரப்பிரதேச அரசை யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். அதற்கு இரட்டை இஞ்சின் என்றால் இரட்டை ஊழலா என்று கேள்வியெழுப்பி இருக்கிறார் அகிலேஷ் யாதவ்.
உத்தரப்பிரதேசத்தில் இன்று தேர்தல் நடந்துவரும் நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் ட்விட்டர் வாயிலாக தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், முதற்கட்ட தேர்தல் நடந்துவரும் நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜக அரசு இரட்டை இஞ்சினாக செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.

யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், '' என்னுடைய மனதில் இருந்து சில விஷயங்களை சொல்ல வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளன. கவனமாக இருங்கள்.. நீங்கள் தவறு செய்துவிட்டால் இந்த ஐந்து ஆண்டுகள் வீணாகிவிடும்.
நீங்கள் தவறு செய்துவிட்டால், காஷ்மீர், கேரளா, பெங்கால் போல உத்தரப்பிரதேசமும் மாற அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாது.

உழைப்பு
இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய ஐந்து ஆண்டு உழைப்புக்கு, உங்கள் ஓட்டுகள் தான் வாழ்த்தாக அமையும். குற்றம் இல்லாத, பயம் இல்லாத, கலவரம் இல்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசத்தை மாற்ற உங்கள் ஓட்டு வழிவகுக்கும். இது மிக முக்கியமான நேரம். இந்த பாஜக அரசு, அர்பணிப்புடன் எல்லாவற்றையும் செய்துள்ளது.

இரட்டை இஞ்சின்
மாநிலத்தின் வளர்ச்சிக்காக அனைத்து துறைகளிலும் இரட்டை இஞ்சினாக வேலை பார்த்திருக்கிறோம். மாநில வளர்ச்சிக்காக மிக தீவிரமாக உழைத்திருக்கிறோம். நீங்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறீர்கள், எல்லாமும் உங்களுக்கு முழுமையாக தெரியும். அதனால் சிந்தித்து வாக்களியுங்கள்'' என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்
இந்நிலையில் யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு பதிலளித்துள்ளார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். பிஜ்னோர் பகுதியில் பிரசாரத்தின் போது, '' இந்த தேர்தல் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றும் தேர்தல். யோகி ஆட்சியில் ஊழல் ஒழிந்ததா. இல்லை. உண்மையில் யோகி சொல்லும் இரட்டை இஞ்சின் என்றால் இரட்டை ஊழல் என்று அர்த்தம்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications