உ.பி:தக்காளி பவுன்சர்கள் விவகாரம் அரசியலாக விஸ்வரூபம்! சமாஜ்வாதி நிர்வாகி, மகனை கைது செய்தது போலீஸ்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தக்காளி கடைக்கு பவுன்சர்களை நியமித்த விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சி நிர்வாகி, அவரது மகனை போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் தக்காளி விலை தாறுமாறாக எகிறி விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தக்காளி விலையை கட்டுப்படுத்த ஆளும் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிற மாநிலங்களில் தக்காளி விலை விண்ணை முட்டிச் செல்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு கிலோ தக்காளி ரூ140-ரூ160 முதல் விற்பனையாகிறது. இதனால் தக்காளி கடையில் விற்பனையை ஒழுங்குபடுத்த பவுன்சர்கள் நியமிக்கப்பட்டதாக ஊடகங்களில் வீடியோவுடன் செய்தி வெளியானது. பொதுவாக சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்கள்தான் இப்படி பவுன்சர்களை நியமித்து கொள்வது வழக்கம். ஒரு தக்காளி கடைக்காரர், பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த பவுன்சர்கள் 2 பேரை நியமித்தது பெரும் பரபரப்பானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கிளப்பிவிட்டது.
இந்நிலையில் தக்காளி கடைக்கு பவுன்சர்களை நியமித்தது சமாஜ்வாதி கட்சி நிர்வாகி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தக்காளி கடை உரிமையாளரான சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அஜய் பவுஜி கூறுகையில், தக்காளி வாங்க வரும் பொதுமக்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனைத் தடுக்கத்தான் பவுன்சர்களை இறக்கினேன் என்றார்.
இந்த பவுன்சர்கள் விவகாரம் சர்ச்சையான நிலையில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த தக்காளி கடை உரிமையாளரையும் அவரது மகனையும் போலீசார் கைது செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக அவர்கள் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் தக்காளி வியாபாரம் செய்யும் வர்த்தகர்களுக்கு இனி இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட வேண்டும் என அதிரடியான கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications