ஆமா..எங்க சிவப்பு தொப்பி பாஜக ஆட்சியை தூக்கி எறிவதற்கான ரெட் அலர்ட்-மோடிக்கு அகிலேஷ் யாதவ் பதிலடி
லக்னோ: சிவப்பு தொப்பி அணிகிறவர்கள் உ.பி.க்கு சிவப்பு எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று சமாஜ்வாதி கட்சியை விமர்சித்த பிரதமர் மோடிக்கு அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி தந்துள்ளார். உ.பி.யில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான ரெட் அலர்ட்தான் எங்களது சிவப்பு தொப்பி என ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.
உ.பி. சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே தேர்தல் பிரசார களம் அனல் பறக்கிறது.

பிரதமர் மோடி விமர்சனம்
உ.பி.யில் பாஜக வலிமையாக இருக்கக் கூடிய கோரக்பூரில்(கிழக்கு உ.பி.) நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி பேசுகையில், சமாஜ்வாதி கட்சியினர் அணியும் சிவப்பு தொப்பி என்பது உ.பி.க்கு சிவப்பு எச்சரிக்கை. சிவப்பு தொப்பி அணிந்தவர்கள் ஊழல் செய்பவர்கள். சட்டவிரோதமாக வளங்களை கொள்ளையடிப்பவர்கள். மாஃபியாக்களை சிறைகளில் இருந்து விடுவிக்க விரும்புகிறவர்கள் என காட்டமாக விமர்சித்தார்.

அகிலேஷ் பதிலடி
பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக பதிலளித்தார் அகிலேஷ் யாதவ். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், ஆமாம்... எங்களது சிவப்பு தொப்பி என்பது பாஜகவை உ.பி.யில் ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான ரெட் அலர்ட்தான். பணவீக்க விகிதம், வேலைவாய்ப்பின்மை, லக்கிம்பூர் படுகொலை உள்ளிட்டவைகளில் பாஜகவுக்கு சிவப்பு எச்சரிக்கைதான் எங்களது சிவப்பு தொப்பிகள். கல்வி, சுகாதாரம், தொழில்துறையை பாஜக சீரழித்துவிட்டது. பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவதற்கான 2022-ம் ஆண்டின் சிவப்பு புரட்சிதான் எங்களது சிவப்பு தொப்பிகள் என பதிவிட்டுள்ளார்.

பாஜகவுக்கு ரெட் அலர்ட்
மேலும் மேற்கு உ.பி.யின் மீரட் நகரில் சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய லோக் தள் கட்சி கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ், ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இணைந்து பிரசாரம் செய்தனர். இக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: பாஜக என்பது பொய்களின் கூடாரம். பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. பாஜக ஒரு போலியான மலர். நாங்கள் பல்வேறு வண்ணங்களைக் கொண்டவர்கள். ஆனால் பாஜகவுக்கு ஒரே ஒரு நிறம்தான் உண்டு. 2022 சட்டசபை தேர்தலில் பாஜகவின் சூரியன் அஸ்தமனமாவது உறுதி. மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கான கதவுகளை மூடுவதற்கு விவசாயிகள் முடிவு செய்துவிட்டனர்.

பாஜகவின் வெறுப்பரசியல்
விவசாயிகள் உரங்களுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். கொரோனா காலத்திலும் சிகிச்சை பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். இப்போதும் கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகையை பெறுவதற்காக காத்திருக்கின்றனர். பாஜக அரசாங்கத்திடம் நீங்கள் வேலை கேட்டால் உங்களுக்கு போலீசாரின் தடியடிதான் பரிசாக கிடைக்கும். பாஜக வெறுப்பரசியலை கோட்பாடாகக் கொண்டது. இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.

யோகி ஆதித்யநாத் மீது சாடல்
இக்கூட்டத்தில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பேசியதாவது: மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக ஓராண்டு காலம் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் எந்த ஒரு பாஜக தலைவரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்க முன்வரவில்லை. விவசாயிகளின் புரட்சிதான் முதல் முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசை மண்டியிட வைத்திருக்கிறது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் அரசாங்கத்தின் கோப்புகளை பார்க்க இயலாது. யோகி ஆதித்யநாத் கன்று குட்டிகளுடன் இருக்கும் போதுதான் சிரிப்பார்.. அவருக்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள். இவ்வாறு ஜெயந்த் சவுத்ரி பேசினார்.












Click it and Unblock the Notifications