இஸ்லாமிய பெண்களுக்கு பாலியல் மிரட்டல்! 11 நாட்களுக்கு பின்.. உ.பி சாமியார் பஜ்ரங் முனி தாஸ் கைது
லக்னோ: முஸ்லீம் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பஜ்ரங் முனி தாஸ் மீது ஒரு வழியாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சீதாபூரில் மஹரிஷி ஸ்ரீ லஷ்மண் தாஸ் உதாஸி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தின் தலைமை பதவியில் மடாதிபதி மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் இருக்கிறார்,
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி பஜ்ரங் முனி தாஸ் தலைமையில் அங்கு ஆன்மீக ஊர்வலம் நடைபெற்றது. போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் அவர் பேசியது சர்ச்சையானது.

சர்ச்சை கருத்து
இந்த ஆன்மீக ஊர்வலம் கைராபாத் பகுதியில் அமைந்துள்ள மசூதி அருகே சென்றது. அப்போது பேசிய பஜ்ரங் முனி தாஸ், "அன்பான வார்த்தைகளால் நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். கைராபாத் பகுதியில் இந்து பெண் கேலி செய்யப்பட்டால், இந்த கைராபாத் பகுதியில் உள்ள இஸ்லாமிய மருமகள்களை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்வேன்" என்று வெளிப்படையாக இஸ்லாமியர்களை மிரட்டும் வகையில் பேசினார்.

தேசிய மகளிர் ஆணையம்
இவரது பேச்சு மிகப் பெரிய அளவில் சர்ச்சையானது. பஜ்ரங் முனி தாஸை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். பஜ்ரங் முனி தாஸின் பேச்சுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லீம் பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் தலையிட்டது. இதில் பஜ்ரங் முனி தாஸ் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உபி டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

கைது
இதன் பின்னரே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் ஆன நிலையில், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இது சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை அதிகரித்தது. பஜ்ரங் முனி தாஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அதிகரித்த நிலையில், இப்போது சம்பவம் நடைபெற்ற 11 நாட்களுக்குப் பின்னர், பஜ்ரங் முனி தாஸை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

மன்னிப்பு
அவரது ஆசிரமத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். வெறுப்புப் பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் பஜ்ரங் முனி மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications