யோகி எடுத்த புதிய ஆயுதம்.. உ.பி.யில் வரும் புதிய சட்டம் .. நெருங்கும் தேர்தல்.. யாருக்கு 'குறி' ?
லக்னோ : மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்து புதிய சட்டத்தை உருவாக்கி உள்ளது உத்தரபிரதேசம். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட எந்தவொரு நபரும் அரசு தரும் எந்த ஒரு மானியத்தையும் அல்லது எந்தவொரு அரசாங்க நிதியுதவி நலத்திட்டத்தையும் பெற முடியாது.
அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கவோ அல்லது எந்தவொரு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டத்தின வரைவில் கூறப்பட்டுள்ளது.
'உ.பி. மக்கள் தொகை (கட்டுப்பாடு, உறுதிப்படுத்தல் மற்றும் நலன்கள்) மசோதா, 2021' என்ற சட்டம் விரைவில் இயற்றப்படஉள்ளது. இந்த சட்ட வரைவு குறித்து உ.பி.யில் உள்ள மாநில சட்ட ஆணையம் ஜூலை 19-க்குள் பொது மக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

பெரும் விவாதம்
இந்த சட்டம் உத்தரப்பிரதேசத்தில் அடுத்த நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது ஆகும். இந்த சட்டம் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் மக்களை இலக்காகக் கொண்டுள்ளது என்ற விவாதமும் எழுந்துள்ளது.

யோகி ஆதித்யாநாத்
வரைவுச் சட்டம் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று விளக்கம் அளிக்க வாய்ப்பு உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ள பாஜக தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, இதில் தெரிவித்துள்ள அம்சங்கள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு வேலை ரத்து
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதை தடுக்கும் நோக்கில் பல்வேறு தடைகள் புதிய சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்கள் எதுவுமே கிடைக்காது.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. உத்தரப்பிரதேச மாநில அரசின் கீழ் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்.

மானியம் ரத்து
அரசாங்க வேலையில் பதவி உயர்வு பெற முடியாது. ரேஷன் கார்டில் நான்கு உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் கணவன் மற்றும் மனைவி இருவருமே எந்தவிதமான அரசாங்க மானியத்தையும் பெற தகுதியற்றவர்களாகிவிடுவார்கள்.

பலதார மணம்
"இந்த மசோதா சட்டமான நாளில் இருந்து ஒரு வருடம் கழித்து நடைமுறைக்கு வரும்" என்று கூறுகிறது . பலதார மணம் செய்தால், ஒவ்வொரு தம்பதியினரும் ஒரு திருமணமான தம்பதிகளாக கணக்கிடப்படுவார்கள், இது குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கிடும் நோக்கத்திற்காக இருக்கும் என்று சட்டம் கூறுகிறது.

கருத்தடை கட்டாயம்
புதிய வரைவுச் சட்டம் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தை விதிமுறைகளை மேம்படுத்துவதற்கான சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது . கணவனோ அல்லது மனைவியோ இரண்டு குழந்தைகளுடன் கருத்தடை செய்து கொண்டால் அரசின் சலுகைகள் அனைத்தையும் அனுபவிக்க முடியும் என்று கூறுகிறது சட்டம். ஒரே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டு கருத்தடை செய்து கொண்டால் இலவச சுகாதார வசதி, ஐ.ஐ.எம் மற்றும் எய்ம்ஸ் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் குழந்தையை சேர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுளள்ளது.












Click it and Unblock the Notifications