1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு விநியோகம்.. அதிர வைத்த அரசு பள்ளி சமையல்கார பெண்
லக்னோ; அரசு பள்ளி சமையல்கார பெண்மணி, ஒரு லிட்டர் பாலில் ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் ஊற்றி 81 மாணவர்களுக்கு பால் காய்ச்சி கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ராவில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு மதியம் வழங்கப்படும் சத்துணவுடன் பாலும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சோன்பத்ரா மாவட்டத்தில் சோபானில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 171 பேர் படித்து வருகிறார்கள்.

பக்கெட் தண்ணீர்
இங்கு சமையல் செய்து வரும் சமையல்கார பெண்மணி ஒருவர் மாணவர்களுக்கு ஒரு லிட்டர் பாக்கெட் பால் வாங்கி அதனை சமையல் செய்யும் சட்டியில் ஊற்றியுள்ளார். அதன்பிறகு அதில் பக்கெட் நிறைய தண்ணீரை உற்றுகிறார். அதை காய்ச்சி பின்னர் மாணவர்களுக்கு விநியோகிக்கிறார்.

வேதனை
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முற்றிலும் ஏழைக்குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளியில் சத்தான உணவு வழங்க வேண்டிய சமையல்கார பெண் ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் ஊற்றி 81 பேருக்கு காய்ச்சி கொடுத்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நீதிபதி விசாரணை
புதன்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதுமான அளவு பால் வழங்கப்படுவதை உறுதி செய்யாததற்காக ஒப்பந்த ஆசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை(எப்ஐஆர்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சோன்பத்ரா மாவட்ட நீதிபதி ராஜலிங்கம் தெரிவித்தார். "இந்த சம்பவம் உண்மையானது தான். பால் பற்றாக்குறை குறித்து அரசு நிர்வாகத்திற்கு தெரிவிக்காததால் மற்றொரு ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.

தர்ம சங்கடம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாணவர்களுக்கு மதிய உணவாக ரோட்டியும் உப்பும் வழங்கப்படுவதை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் அம்பலப்படுத்திய நிலையில் அவர் மீது அரசுக்கு எதிராக அவதூறு செய்ய சதி செய்தாக போலீஸ் வழக்கு தொடர்ந்து . அதன் பிறகு இப்படி ஒரு வீடியோ வெளியாகி இருப்பது உத்தரப்பிரதேச அரசுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications