111 பேரின் உயிரை பறித்த.. புழுதிப்புயல்+கனமழை! உத்தரப் பிரதேசத்தில் சோகம்!
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் மே 13 அன்று வீசிய பலத்த புழுதிப்புயல், கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இக்கடுமையான இயற்கை சீற்றத்தால் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 111 பேர் உயிரிழந்ததாகவும், 72 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மொத்தம் 26 மாவட்டங்கள் இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மனித உயிரிழப்புகள் மட்டுமல்லாது 170 விலங்குகள் பலியாகின. 227 வீடுகள் பாதிக்கப்பட்டன. பிரயாக்ராஜ் மாவட்டத்தில்தான் உயிரிழப்புகள் அதிகம். இந்த மாவட்டத்தில் 21 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மிர்சாபூர் (19), பதோஹி (16), ஃபதேபூர் (11), பரேலி (2) ஆகிய மாவட்டங்களிலும் உயிர்ச்சேதங்கள் பதிவாகியுள்ளன.

நிவாரணம் அறிவிப்பு
பெரும்பாலான உயிரிழப்புகள் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், கட்டிடங்கள் இடிந்ததாலும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உடனடியாக சேதங்களை மதிப்பிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக தலா ₹4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி உதவி
பயிர் இழப்பு, கால்நடை உயிரிழப்புகள் மற்றும் பிற சேதங்களுக்கான இழப்பீடுகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவாரண ஆணையர் அலுவலகம் மாவட்ட அதிகாரிகளுடன் நேரடியாக ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிவாரண ஆணையர் அலுவலகம் இரவு பகல் பாராமல் நிலைமையை கண்காணித்து வருவதுடன், மாநிலத்தின் சில பகுதிகளில் வானிலை எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்டங்களுக்கு ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒருமுறை இதுகுறித்த தகவல்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிரிழப்பு அதிகரிக்கும்
உயிரிழந்தவர்கள் மற்றும் சேதமடைந்தவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. பதோஹி மாவட்டத்தில் உள்ள ராம்பூரில், கங்கை நதிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பாலம் புயலால் சேதமடைந்ததில், பலர் ஆற்றில் விழுந்தனர். இருப்பினும், ஆற்றில் விழுந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கௌரா பிரமான்பூரிலும் ஒரு தற்காலிகப் பாலம் சேதமடைந்து, சுமார் 20 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
என்ன காரணம்
உத்தரப் பிரதேசத்தில் இவ்வளவு பெரிய உயிரிழப்புக்கு காரணமாக வானிலை மாற்றம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் கொடுத்திருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி அதுல் குமார் சிங், "இந்த பருவத்தில் புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை வழக்கமானது என்றாலும், காற்றின் வேகத்தைப் பொறுத்தவரை இந்த நிகழ்வு வழக்கத்திற்கு மாறாகத் தீவிரமாக இருந்தது" என்று கூறியுள்ளார். சில பகுதிகளில் புயலின் தீவிரம் மணிக்கு 100 கி.மீ வேகத்தைத் தாண்டியதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications