உ.பி மண்ணிலேயே பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்.. இடைத்தேர்தல் தோல்வி ஏன்? முக்கியமான 3 காரணங்கள்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு கோசி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு அதிர்ச்சி தோல்வியை அளித்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமான இந்த இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி 'இந்தியா' கூட்டணிக்கு உற்சாகம் அளித்துள்ளது. எப்படி பாஜக இங்கு தோற்றது?
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணிக்கும் - பாஜக கூட்டணிக்கும் இடையே நடக்கும் முதல் தேர்தல் இது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் 2 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. 2 இடங்களில் பாஜக அல்லாத கூட்டணி வென்றுள்ளது. 3 இடங்களில் பாஜக வென்றுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, ஜார்க்கண்டின் தும்ரி, திரிபுராவில் உள்ள போக்ஸாநகர் மற்றும் தன்பூர், உத்தரகாண்டின் பாகேஷ்வரிலும் தேர்தல் நடந்தது. இந்த 5 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பாக கூட்டணி வேட்பாளர் களமிறக்கப்பட்டனர். மேற்கு வங்கத்தில் துப்குரி மற்றும் கேரளாவின் புதுப்பள்ளியில் இந்தியா கூட்டணி ஒன்றாக களமிறங்காமல் தனித் தனியாக களமிறங்கின.
உ.பி இடைத்தேர்தல்: உத்தர பிரதேச மாநிலம் கோசி தொகுதி எம்எல்ஏவாக தாரா சிங் சவுகான் இருந்தார். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பாஜக சார்பில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கே பிரசாரத்துக்கு தலைமை தாங்கினார். பாஜகவின் தாரா சிங் சவுகானை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் களமிறங்கினார்.
இங்கே சமாஜ்வாதி கட்சிக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆதரவளித்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் 1,24,427 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் தாரா சிங் சவுகானை 42,759 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
3 காரணங்கள்: உத்தர பிரதேச மாநிலத்தில் 'இந்தியா' கூட்டணியின் வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. எதிர்வரும் 2024 லோக்சபா தேர்தலையொட்டி இந்த இடைத்தேர்தல் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தல் முடிவு, 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், 'இந்தியா' கூட்டணி சார்பில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது 'இந்தியா' கூட்டணிக்கு பெரும் நம்பிக்கை கொடுத்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் வென்றால் பாஜக வேட்பாளர் தாரா சிங் சவுகான், யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவரை வென்று அதிர்ச்சி கொடுத்துள்ளது 'இந்தியா' கூட்டணி. உ.பியில் பாஜகவின் தோல்விக்கான காரணங்கள் அலசப்பட்டு வருகின்றன.
பாஜக வேட்பாளருக்கு எதிரான அதிருப்தி: கட்சி தாவிய தாரா சிங் சவுகானுக்கு எதிராக தொகுதி மக்களிடையே அதிருப்தி அலை இருந்து வந்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சமாஜ்வாடி கட்சியில் எம்.பியாகச் செயல்பட்டவர் தாரா சிங் சவுகான். 2017ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத்தின் தலைமையிலான முதல் பாஜக அமைச்சரவையில் தாரா சிங் சவுகான் அமைச்சராக இருந்தார். பின்னர் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து பாஜக வேட்பாளர் விஜய் குமா ராஜ்பரை தோற்கடித்தார். இந்நிலையில் மீண்டும் கட்சி தாவினார். இதனால், வாக்காளர்களிடையே தாரா சிங் சவுகான் மீது ஏற்பட்ட அதிருப்தி, இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
உள்ளூர் vs வெளியூர்: சமாஜ்வாடி வேட்பாளர் சுதாகர் சிங் உள்ளூர்காரர் என்பது அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது. ஏற்கனவே கோஷி தொகுதியில் 2012-2017 காலகட்டத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர் சுதாகர் சிங். ஆனால், தாரா சிங் சவுகான் மதுபன் தொகுதியில் முன்னர் வென்று, சமாஜ்வாடி கட்சியில் இணைந்தபிறகு கோஷி தொகுதியில் வென்றவர். இதுவும் இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளது.
பகுஜன் சமாஜ் விலகல்: பகுஜன் சமாஜ் கட்சி இந்த இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாதது இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளை உயர்த்தியது. பகுஜன் சமாஜ் கட்சி இந்த தொகுதியில் கடந்த கால தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை கடந்த தேர்தல்களில் பி.எஸ்.பி பெற்றுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் போட்டியிடாததால், தலித் வாக்குகளில் பெரும் பகுதி சுதாகர் சிங்குக்கு சென்றதாக தெரிகிறது. இதன் மூலம், 'இந்தியா' கூட்டணி எளிதாக வெற்றியை வசப்படுத்தியுள்ளது. ஆக, 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பான இந்த இடைத்தேர்தல் வெற்றி 'இந்தியா' கூட்டணி கட்சிகளுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications