உத்தரப் பிரதேசத்தில் அடியோடு மாறும் உட்கட்டமைப்பு! யோகி ஆதித்யநாத் அரசு ரூ.176 கோடி நிதி ஒதுக்கீடு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.176.66 கோடி நிதியை மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் உத்தரப் பிரதேசம் மேலும் சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகளை பெறும் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.176.66 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் ரயில்வே மேம்பாலங்கள், கிராமப்புற சாலைகள் மற்றும் புறவழிச்சாலை ஆகியவை அமைக்கப்படும் என்று அம்மாநில பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல மஹ்மூதாபாத்தில், கோரக்பூரின் பர்கத்வா-கௌவாபாத் பகுதியில் 2.10 கிமீ புறவழிச்சாலையும், 4 வழிச்சாலை விரைவு சாலை அமைக்கவும், கஜானாச்சி சௌராஹா சாலையில் மேம்பாலம் கட்டவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை கூறியுள்ளது.
ஏற்கெனவே உத்தரப் பிரதேசம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கையில், இந்த நிதியானது மாநில வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். சாலை, மேம்பாலம் போன்ற கட்டமைப்புகளுக்கு மாநில அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு சமூக வளர்ச்சிக்கும் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என அவர்கள் கூறுகின்றனர்.
அதாவது, "உத்தரப் பிரதேசத்தில் 3.43 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றனர். வறுமையை ஒழிப்பதில் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. மாநில அரசு பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் முதலமைச்சரின் ஜன் ஆரோக்கிய யோஜனா ஆகியவற்றின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications