'சூப்பர்'.. மாநில விலங்குகளை பாதுகாக்க ஸ்பெஷல் பூங்காக்கள்.. சூழலியலில் கவனம் செலுத்தும் உ.பி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் மாநில விலங்கான 'சதுப்புநில மான்களுக்கு' சிறப்பு பூங்காக்களை உருவாக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதனை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்குமுன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் இம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்ததில்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத்தின் சாதனைகளை பாஜக மக்களிடத்தில் கொண்டு சேர்ந்து வருகிறது. யோகியும் அன்றாடம் புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என யோகி ஆதித்யநாத் தொடர்ந்து அதிரடியாக பல விஷயங்களை செய்து வருகிறார்.

தற்போது ஏற்கெனவே முடிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தல், சமூக நிகழ்ச்சிகளை நடத்துதல், பெண்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்துதல் என யோகி பிஸியாக இருந்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது சூழலியல் சார்ந்த அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதாவது மாநில விலங்கான சதுப்புநில மான்களுக்கும், மாநில பறவையான சரஸ் கொக்குகளுக்கும் சிறப்பு பூங்காக்களை உருவாக்குவது என்பதுதான் இந்த அறிவிப்பு. அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலைகள் கழிவுகள் ஆகியவை வன உயிரினங்களுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இதில் சதுப்புநில மான்கள் முழுக்க முழுக்க அடர்ந்த காடுகளில்தான் வாழும். ஆனால் மனிதர்களின் ஆக்கிரமிப்பு இந்த மான்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. எனவே இதனை பராமரிக்க புதிய முயற்சிகளை உ.பி அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகதான் இந்த திட்டத்தை அறிவித்துக்கிறது. அதேபோல காடுகளில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும் உ.பி அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியை சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட பைக்குகளை வனத்துறையினருக்கு அர்ப்பணித்தார்.
அப்போது பேசிய அவர், "இன்று காலநிலை மாற்றம் என்கிற அச்சுறுத்தலை நாம் எதிர்கொண்டு வருகிறோம். எனவே இதிலிருந்து மக்களை மட்டுமல்லாது வன விலங்குகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வனத்துறைக்கு இருக்கிறது. காடுகளில் நடைபெறும் மாற்றங்களை கண்காணிக்க ஹீரோ பைக் நிறுவனம் சுமார் 250 பைக்குகளையும், 35 ஸ்கூட்டர்களையும் வழங்கியிருக்கிறது. இதன் மூலம் ஹீரோ தனது சமூக பொறுப்பை நிரூபித்திருக்கிறது. முதன் முறையாக இவ்வளவு பெரிய நிதியை ஒரு கார்ப்ரேட் நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழங்கியிருப்பதை நான் இப்போதுதான் பார்க்கிறேன். உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் கடந்த 6 ஆண்டுகளில் நாங்கள் 100 கோடி மரங்களை நட்டிருக்கிறோம். எனவு சூழலியல் விஷயத்தில் நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications