உ.பியில் வாட்டி வதைக்கும் வெப்பம்! மக்களை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்.. யோகி அரசு அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வீசி வரும் வெப்ப அலையிலிருந்து மக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பது குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை யோகி ஆதித்யநாத் நடத்தியுள்ளார்.
தென்னிந்தியாவில் தற்போது பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், வட இந்தியாவில், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது, மட்டுமல்லாது வெப்ப அலையும் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வன உயிரினங்கள் தண்ணீருக்காக அதிக அளவில் புலம் பெயர தொடங்கியுள்ளன.

இந்நிலையில், நேற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய யோகி, "கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மட்டத்திலும் உறுதியான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அதீத வெயிலினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதை தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். நோய் ஏற்பட்டால் அனைவருக்கும் உடனடி மருத்துவ வசதிகளை வழங்குங்கள். வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவமனைகள்/மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
அனைத்து நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பொது இடங்களிலும் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இப்பணியில் சமூக/மத அமைப்புகளின் ஒத்துழைப்பும் பெறப்பட வேண்டும். பொதுமக்கள் மட்டுமல்லாது, கால்நடைகள், நாய்களுக்கும் போதிய அளவில் தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications