மாஸ் காட்டும் டபுள் என்ஜின் அரசு! உ.பி வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றுவதாக யோகி நெகிழ்ச்சி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் டபுள் என்ஜின் அரசு மூலம் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் இந்த வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றி வருவதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
தற்போது உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் மத்திய பாஜக உத்தரப் பிரதேசத்திற்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளதாக யோகி அதித்யநாத் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மாநிலத்திற்கு புதிய ஜவுளி பூங்கா அமைய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மாநில தலைநகரான லக்னோவில் இந்த பூங்கா சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இதற்காக மத்திய அரசு தரப்பில் ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பூங்கா 'பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் அப்பேரல் பார்க்(PM MITRA)' எனும் திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகிறது. இது உத்தரப் பிரதேசத்திற்கு மட்டுமல்லாது தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் என ஆறு மாநிலங்களிலும் அமைய இருக்கிறது. இந்த பூங்கா குறித்து மத்திய அரசுக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,
"உத்தரப் பிரதேசத்தின் 25 கோடி மக்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பூங்கா மூலம் மாநிலத்தின் வளர்ச்சியானது இரண்டு மடங்காக அதிகரிக்கும். விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ.6,000 நிதியுதவி உத்தரப் பிரதேசத்தின் விவசாயிகளுக்கு பெரும் பலனளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை விவவசாயிகளும் பலன்பெற வேண்டும் என நாங்கள் நேற்று முன்தினம் கூட சிறப்பு முகாம்களை நடத்தினோம். எனவே மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்தால் அந்த இடத்தில் முழு வளர்ச்சி சாத்தியமாகும் என்பதுதான் உண்மை" என்று கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்திற்கு புதிய திட்டங்களை யோகி அதித்யநாத்தும், மத்திய அரசும் தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என ஆளும் பாஜக அரசு மாநிலத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக அரசு நிதியை ஒதுக்கியிருந்தது.
மேலும், உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்து. அந்த வகையில் லக்னோவை சர்வதேச அளவில் தரம் உயர்த்துவது, மாவட்ட தலைநகரங்களை சரியான முறையில் கட்டமைப்பது, மாநிலம் முழுவதும் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்தல், வீடுகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வெளியேற்றும் பாதைகளை சரி செய்தல் என எல்லாவற்றிற்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications