உட்கட்டமைப்பில் டாப்! அதிரடியாய் குவியும் முதலீடுகள்.. உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பான உள்கட்டமைப்பு வசதி ஏராளமான முதலீட்டாளர்களை ஈர்த்திருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யாநத் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "கடைசியாக நாங்கள் 2018ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் மற்றொரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். இம்மாநிலத்தில் எது சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டதோ அதை நாங்கள் கடந்த 6 ஆண்டுகளில் வியர்வை சிந்தி உழைத்து சாத்தியமாக்கியிருக்கிறோம். அதன் பலனாக இன்று எங்களிடம் சிறப்பான சேவைகள் இருக்கின்றன.

எக்ஸ்பிரஸ் சாலைகள், சர்வதேச விமான போக்குவரத்து நெட்வொர்க், சிறப்பான ரயில் நெட்வொர்க் ஆகியவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் ஒவ்வொரு துறைக்கும் அது சார்பான கொள்கைகளை வகுத்து எங்களது பணிகளை முன்னெடுத்து சென்றோம். நிலங்களை அதிக அளவில் பதுக்கி வைத்திருக்கும் மாஃபியாக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். 64 ஆயிரம் ஹெக்டேர் நிலம் இந்த மாஃபியாக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.
சர்வதேச அளவில் 16 நாடுகளிலிருந்தும், தேசிய அளவில் 8 பெரிய நகரங்களில் இருந்தும் முதலீடுகளை உத்தரப் பிரதேசத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். மிகவும் பின்தங்கிய பகுதிகளான பூர்வாஞ்சல் மற்றும் புந்தேல்கண்ட் பகுதிகளிலும் கூட பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய வெற்றி. ஒரு காலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு மும்பையிலும், டெல்லியிலும் நடைபெற்றது. ஏன் உத்தரப் பிரதேசத்தில் இம்மாநாடு நடைபெறவில்லை என்று கேட்கப்பட்டதற்கு இம்மாநிலத்திற்கு யார் வாருவார்கள்? என்று ஏளனமாக பேசப்பட்டது.
ஆனால், இந்த ஏளனத்தை உடைத்து நாங்கள் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். நாங்கள் முதன் முறையாக ஆட்சிக்கு வந்தபோது 2017ம் ஆண்டில் ரூ.3.40 லட்சம் கோடி வளர்ச்சி நிதியாக பட்ஜெட்டில் அறிவித்தோம். தற்போது 6 ஆண்டுகள் கடந்த இந்த நிதியானது ரூ.6.90 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது மாநிலத்தின் சிறந்த பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறது. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி, 'அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி' எனும் தாரக மந்திரத்தை வழங்கினார். இந்த மந்திரம்தான் எங்களது வெற்றிக்கு காரணம். தற்போது உத்தரப் பிரதேசத்தின் உட்கட்மைப்பு வசதிகள் மேம்பட்டிருப்பதால் முதலீடுகள் அதிக அளவில் குவிந்து வருகின்றன" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications