பெரிய மாற்றம்.. கலவரங்கள் இல்லாத மாநிலம் உத்தரப்பிரதேசம்.. 6 ஆண்டு ஆட்சி குறித்து யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கலவரங்களை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது பாஜக ஆட்சி என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் முதலமைச்சராக யோகி பொற்பேற்று 6 ஆண்டுகள் கடந்ததை அம்மாநில அரசும் பாஜகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் நீடித்ததில்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

இந்த சாதனையை கொண்டாடும் விதமாக புதிய திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்த திட்டங்களை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்து வருகிறார். அதேபோல பல்வேறு சமூக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இப்படியாக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த அவர், "உத்தரப் பிரதேசத்திற்கு என தற்போது ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதுதான் அந்த இலக்கு.
எனவே அதற்கான பணிகளை மாநில அரசு சிறப்பாக செய்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த நோக்கத்திற்காகதான் நடத்தப்பட்டது. இதன் மூலம் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு மாநிலத்தில் முதலீடுகள் செய்யப்பட இருக்கிறது. இந்த முதலீடுகள் மூலம் மாநிலம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். இந்த முதலீடுகள் மூலம் வரும் தொழிற்சாலைகள் சிறப்பாக இயங்க உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இதற்காக சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் உட்கட்டமைப்பு மட்டுமல்லாது, கல்வி, சுகாதாரம், தொலைதொடர்பு என 10 துறைகளை மேம்படுத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில் மாநிலத்தில் குண்டர்களின் அட்டூழியங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. இது வளர்ச்சிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் நமது மாநிலத்தை பின்னோக்கி தள்ளிவிடும். 6 ஆண்டுகளுக்கு முன்னர் உ.பியில் 2 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை கலவரம் நடக்கும்.
ஆனால் பாஜக ஆட்சி பொறுப்பில் வந்ததிலிருந்து இந்த கலவரங்கள் முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடியின் வழிகாட்டல்தான். கடந்த 6 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கே சரியாய் போய்விட்டது. மீதமிருந்த ஆண்டுகளில்தான் குற்றவாளிகளை நாங்கள் கட்டுப்படுத்தினோம். ஜாதி, மதம், ஊழல் மற்றும் வாரிசு அரசியலிலிருந்து இன்று உத்தரப் பிரதேசம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு பாஜக அரசுதான் காரணம்" என்று யோகி அதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications