கோயில்களை விட உயரமாக கட்டிடமா? கூடவே கூடாது.. உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் போட்ட உத்தரவு!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கோயில்களை விட உயரமாக கட்டிடங்களை கட்ட அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார். இந்த தடை உத்தரவு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று கோரக்பூர், வாரணாசி மற்றும் மதுரா-பிருந்தாவனின் நகரங்களின் வளர்ச்சி தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் திட்ட அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த அவர், சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார். அந்த வழிகாட்டுதலில்தான் கோயில்களை விட உயரமாக கட்டிடங்களை கட்ட கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

அதாவது, கோரக்பூர், வாரணாசி மற்றும் மதுரா-பிருந்தாவன் போன்ற நகரங்கள் இந்து மதத்தின் அடையாளங்களாக இருக்கிறது. பழமையான மற்றும் வரலாற்று சாரத்தை பராமரிக்க இங்குள்ள கோயில்கள் மற்றும் புனித கட்டிடங்களை சுற்றி இதை விட உயரமான கட்டுமானங்கள் கட்டப்படக்கூடாது. சுருக்கமாக சொல்வதெனில் கோயில்களை விட உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. நகரின் வளர்ச்சிக்கு, கட்டுமானங்கள் மிக முக்கியமானது. ஆனால், கோயிலை விட உயரமான கட்டுமானங்கள் கூடாது என்பது? வளர்ச்சியை முடக்கும் செயல் என்று விமர்சித்துள்ளனர். இது மட்டுமல்ல இம்மாநிலத்தில் பசுக்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் பலவும் தொடர் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
அதாவது பசுக்களுக்கு ஸ்வெட்டர் தைத்து போடுவது, பசு கோமியத்திலிருந்து மருந்து தயாரிக்கும் முயற்சி என உ.பி அரசு பசு அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் கோமியத்தில் ஏதும் இல்லை என்று அடுத்தடுத்து ஆய்வுகள் தொடர்ந்து நிரூபித்தாலும் கூட, உ.பி பாஜகவினர் தொடர்ந்து பசு கோமியம் நல்லது என்றே கூறி வருகின்றனர். இது தவிர மாட்டிறைச்சியை வைத்திருந்ததாக கூறி அரங்கேறும் கொலைகள் எண்ணில் அடங்காதவை.
தலித் மற்றும் பழங்குடியினர் மீது அடிக்கடி நடத்தப்படும் பாலியல் வன் கொடுமைகள், ஆணவ கொலைகள் ஆகியவை இவர்களின் பாதுகாப்பில் தேசிய அளவில் உத்தரப் பிரதேசத்தின் இடம் என்ன? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. மறுபுறம் இஸ்லாமிய அரசர்களின் பெயர்களை கொண்ட சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. நகரங்களின் பெயர்களும் இப்படி மாற்றப்பட்டிருக்கிறது. புல்டோசர் அரசியல், மசூதிகளிலிருந்து ஸ்பீக்கர்களை அகற்றுவது என பல்வேறு சர்ச்சை நடவடிக்கைகளுக்கு உத்தரப் பிரதேசம் பெயர் பெற்றிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது கோயில்களை விட உயரமாக கட்டிடங்களை எழுப்பக்கூடாது என்கிற உத்தரவு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications