உ.பியில் புதுப்பொலிவு பெறும் அங்கன்வாடி மையங்கள்! யோகி ஆதித்யநாத் பிறப்பித்த அதிரடி உத்தரவு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த முதலமைச்சர் யோகி அதித்யநாத் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேபோல நவராத்திரியை முன்னிட்டு அங்கன்வாடி மையங்களில் சூடான சமைத்த உணவு திட்டத்தை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துவது தொடர்பாக புதிய உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்.

மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அங்கன்வாடி மையங்கள் முதற்கட்ட முறையில் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தற்போது வாடகை இடங்களில் இயங்கி வரும் மையங்களை சொந்தக் கட்டிடங்களுக்கு மாற்றவும், காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் பணியிடங்களை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
அங்கன்வாடி மையங்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் உணவை வழங்கும் நோக்கில், சாரதியா நவராத்திரியின் போது சூடான சமைத்த உணவு திட்டத்தைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இம்முயற்சியின் கீழ் மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு சூடான சமைத்த உணவுகள் மற்றும் பருவகால பழங்கள் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்தும் செயல்படுத்தப்படுமாயின் மாநிலத்தில் உள்ள அங்கன்வாடிகள் பலம் பெறும். இது ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தை வளர்க்கும் என்றும் யோகி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications