லிஸ்ட் போட்ட யோகி.. போதைப்பொருள் தடுப்பு படையில் அதிரடி சேஞ்ச்.. காரணம் இதுதான்.. பூரித்த முதல்வர்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க காவல்துறையில் மாநில அரசு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் பேசு பொருளாகியுள்ள நிலையில், தற்போது இந்த நடவடிக்கையும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் ஜான்சியில் நடந்த என்கவுன்ட்டரில் பிரபல அரசியல்வாதியின் மகனும், ரவுடியுமான ஆசாத் அவரது கூட்டாளி ஒருவருடன் சுட்டு கொல்லப்பட்டார். இதன் மூலம் யோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டுகால ஆட்சியில் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 183 ஆக அதிகரித்துள்ளது. இந்த என்கவுன்ட்டர் நடவடிக்கைகள் மாநிலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த என்கவுன்ட்டர் குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல மனித உரிமைகள் ஆணையம் இந்த விஷயத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன. யோகி ஆதித்யநாத் உ.பி முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 10,900க்கும் அதிகமான என்கவுன்ட்டர்கள் நடந்திருக்கிறது. அதேபோல இந்த என்கவுன்ட்டர்கள் மூலம் ஏராளமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5,046 பேர் காயமடைந்துள்ளனர். 183 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதான் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. எனவே மாநிலத்தில் குற்ற எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டி இருக்கிறது. ஒரு காலத்தில் உத்தப் பிரதேசத்தில் முதலீட்டாளர்கள் வருவதற்கே பயந்தனர். காரணம் உள்ளூர் மாஃபியாக்கள்தான். அந்த அளவுக்கு அவர்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை உத்தரப் பிரதேச அரசு சிறப்பாக நடத்தியிருக்கிறது. இதன் மூலம் மாநிலத்திற்கு ரூ.35 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஒப்பந்தமாகியுள்ளன. இந்த முதலீடுகள் வெற்றிகரமாக மாநிலத்திற்கு வர வேண்டும் எனில் சில குறைபாடுகளை களைய வேண்டும். கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள், தொலைத்தொடர்பு, சாலை போக்குவரத்து போன்ற துறைகளில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காகதான் கடந்த பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாற்றங்கள் தேவைப்படும் துறைகளில் முதன்மையானது சட்டம் ஒழுங்கு. எனவேதான் இந்த என்கவுன்ட்டர்களை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. அதேபோல இதன் தொடர்ச்சியாக போதைப் பொருள் ஒழிப்பிலும் மாநில அரசு தீவிரமாக செயல்பட இருக்கிறது. எனவே போதைப்பொருள் தடுப்பு அதிரடிப் படையில் உள்ள காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அதாவது இந்த அதிரடிப்படையில் காவல் துறையில் இருந்து 450 பேர் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இவர்கள் போதை பொருட்களை ஒழிப்பதில் தீவிரமாக செயல்படுவார்கள்.
இத்துறையில் 16 இன்ஸ்பெக்டர், 38 சப் இன்ஸ்பெக்டர், 84 ஹெட் கான்ஸ்டபிள், 162 கான்ஸ்டபிள், 5 சிம் (ஸ்டெனோ), 8 எஸ்ஐ (எம்), 35 கான்ஸ்டபிள் டிரைவர், 2 எஸ்ஐ (எம்), 8 ஏஎஸ்ஐ (எம்) பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே முதற்கட்டமாக இந்த பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்பப்படும். மேலும் கூடுதலாக பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அவையும் நிரப்பப்படும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications