உ.பி.யில் விசித்திரம்.. யோகி ஆதித்யநாத், அகிலேஷ், மாயாவதி, பிரியங்கா தேர்தலில் போட்டி இல்லை?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அனல் பறக்க பிரசாரம் செய்யும் முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி என அனைவருமே சட்டசபை தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என்கின்றன தகவல்கள்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உ.பி. தேர்தல் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன. அதேநேரத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் கடும் போட்டியை தரும் என்கின்றன.

யோகி ஆதித்யநாத் போட்டியிடுவாரா?
இந்த நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா என்கிற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. யோகி ஆதித்யநாத், உ.பி. சட்டமேலவை - எம்.எல்.சியாக இருக்கிறார். அவர் சட்டசபை தேர்தல் எதிலும் போட்டியிடவில்லை. இதனால் இந்த முறை போட்டியிடுவாரா? என்கிற கேள்வியை அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் எழுப்புகின்றனர். யோகி ஆதித்யநாத்தும் கூட கட்சி மேலிடம் என்ன கட்டளை இடுகிறதோ அதனை செய்வேன் என பட்டும்படாமல் கூறி வருகிறார். இதுவரை யோகி ஆதித்யநாத் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா? என்பதற்கு திட்டவட்டமான பதில் இல்லை.

போட்டியிடாத அகிலேஷ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தற்போது லோக்சபா எம்.பி.யாக உள்ளார். உ.பி.யின் ஆசம்கார் சிட்டிங் எம்.பி. அகிலேஷ் யாதவ். கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தாம் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என திட்டவட்டமாக கூறியிருந்தார் அகிலேஷ் யாதவ். தற்போது பாஜகவுக்கு கடும் போட்டியை சமாஜ்வாதி கட்சி தேர்தல் களத்தில் உருவாக்கும் என கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன. அகிலேஷ் யாதவும் சமாஜ்வாதி கட்சியே ஆட்சி அமைக்கும் என்கிறார். இதனால் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்கிற நிலைப்பாட்டை அகிலேஷ் மாற்றி கொள்வாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மாயாவதி போட்டி இல்லை
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான சதீஷ் சந்திரா எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் சந்திரா, முன்னாள் முதல்வர் மாயாவதி, நான் ஆகியோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. சமாஜ்வாதி கட்சிக்கு 400 வேட்பாளர்களே இல்லை என்கிற போது எப்படி 400 இடங்களில் வெல்லும்? பகுஜன் சமாஜ் கட்சியே ஆட்சி அமைக்கும் என்றார். ஆனால் கருத்து கணிப்புகளைப் பொறுத்தவரையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 அல்லது 17 இடங்கள்தான் கிடைக்கும் என்கின்றன.

பிரியங்கா போட்டி இல்லை
இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸை உயிர்ப்பிக்க இடைவிடாது முயற்சி செய்து வரும் பிரியங்கா காந்தியும் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது தெளிவாகவில்லை. உ.பி.யில் என்னதான் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் பிரியங்கா காந்தி, பலபரீட்சையாக தேர்தலில் இறங்க வாய்ப்பு குறைவு என்கின்றனர் அம்மாநில சீனியர் பத்திரிகையாளர்கள். உ.பி.யில் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் மட்டுமே செய்கின்றனர்... ஒருவர் கூட்ட தேர்தல் களத்தை எதிர்கொள்ளவில்லை என்பது விசித்திரம்தான்.












Click it and Unblock the Notifications