2018ல் கஸ்டடி டெத் அதிகம்.. கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தெரியுமா? - டிஜிபி சைலேந்திரபாபு பகீர் தகவல்!
மதுரை : தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 18 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 84 மரணங்கள் காவல் நிலையங்களில் அரங்கேறியுள்ளது என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இது தான் எனது ஆசை! அதை நிறைவேற்றுவீர்களா! கரூரில் உறுதி வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
இனி ஒருவர் கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிரிழக்கக்கூடாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றும் சைலேந்திர பாபு பேசியுள்ளார்.
விழிப்புணர்வு கருத்தரங்கு
தமிழக காவல் நிலையங்களில் கைதிகள் உயிரிழப்பதைத் தடுப்பது தொடர்பாக டி.ஜி.பி சைலேந்திரபாபு மாவட்டம்தோறும் விழிப்புணர்வை கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை நடந்தது. இதில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், எஸ்.பி சிவபிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
லாக்கப் டெத்
டி.ஜி.பி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள் காவல் நிலையங்களில் நடந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 84 மரணங்கள் அரங்கேறியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு மட்டும் 18 காவல் நிலைய மரணங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. இதுதொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காவல்துறை மீது
இதில் 12 வழக்குகளில் மட்டுமே போலீசாரின் தவறு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சில கைதிகள் உடல்நலக் குறைவு மற்றும் தற்கொலையால் உயிரிழப்பார்கள். ஆனால் அதற்கும் காவல்துறை மீது குற்றம்சாட்டப்படும்.
கஸ்டடி மரணங்கள்
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 4 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 2022ஆம் ஆண்டில் 2 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன. சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு காவல்துறையினர் செயல்பட வேண்டும்." எனப் பேசியுள்ளார்.
இனி ஒருவர் கூட
மேலும் பேசிய சைலேந்திர பாபு, தமிழகத்தில் இனி ஒருவர் கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிரிழக்கக்கூடாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருச்சியில் லாக்கப் டெத் விழிப்புணர்வு கருத்தரங்கு, கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் காவல் நிலைய மரணம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம், மதுரையில் நடந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.