வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
மதுரை: மதுரை திருமங்கலம் நெடுஞ்சாலையில் வெயில் தாங்க முடியாமல் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி நடுரோட்டில் தலைசுற்றி மயங்கி விழுந்து துடிதுடித்தார். ஆனால் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவருக்கு உதவாத நிலையில் காவலர் ஓடிச்சென்று அவரை உரிய நேரத்தில் காப்பாற்றினார். இந்நிலையில் தான் மாற்றுத்திறனாளி நெடுஞ்சாலையில் மயங்கி விழுந்து துடித்த வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பல இடங்களிலும் வழக்கத்தை விட கோடை வெயில் அதிகரித்துள்ளது. குறிப்பாக வெப்ப அலை அதிகமாக வீச தொடங்கி உள்ளது. இந்தியாவில் அதிக வெயில் பதிவான நகரங்களின் பட்டியலில் நேற்று முன்தினம் ஈரோடும், நேற்று சேலமும் இடம்பிடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

சேலம், ஈரோடு தவிர தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. இதனால் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் பொதுமக்களுக்கு முக்கிய அட்வைஸ் வழங்கி உள்ளனர்.
அதன்படி மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் . அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். மற்றபடி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி கூறியுள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மதுரை திருமங்கலம் நெடுஞ்சாலையில் மதிய வேளையில் நடந்து சென்ற பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி வெயிலின் காரணமாக தலைசுற்றி மயங்கி விழுந்து துடிதுடித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது நெடுஞ்சாலையில் கண்பார்வை குறைபாடு கொண்டவர் நடந்து செல்கிறார். அவர் தனது தோளில் 2 பைகளை மாட்டியுள்ளார். அப்போது திடீரென்று அவர் சாலையின் ஒரு பகுதியில் சுற்றி சுற்றி வருவதோடு, அடுத்த சில நொடிகளில் அவர் தனது கையில் இருந்த பைகளை சாலையிலேயே இறக்கி வைத்துவிட்டு நடுரோட்டில் படுக்கிறார். அதன்பிறகு வெயில் தாங்க முடியாமல் அவர் துடிக்கிறார்.
இந்த வேளையில் அந்த சாலையில் பல வாகனங்கள், பைக்குகளில் மக்கள் சென்றாலும் கூட அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. சாலையில் மயங்கி கிடந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை பார்த்தபடி அவர்கள் கடந்து சென்றனர். இந்த வேளையில் பைக்கில் காவலர் ஒருவர் அந்த வழியாக வந்தார்.
அவர் உடனடியாக தனது பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓடோடி வந்தார். அவரை பார்த்து இன்னொருவரும் தனது பைக்கை நிறுத்திவிட்டு வந்தார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளியை மீட்டு அருகே சாலையோரம் கொண்டு சென்று நிழலில் அமர வைத்து குடிநீர் வழங்கினர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications