மதுரை மத்திய சிறையில் போலீஸ் - கைதிகள் இடையே பயங்கர மோதல்... போலீஸ் குவிப்பு
மதுரை: மதுரை மத்திய சிறையில் போலீஸ்-கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கைதிகள் சிலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் காவல்துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி, சட்டைகளை களைந்து போராட்டம் நடத்தினர். காவலர்கள் மீது கைதிகள் கற்களைக் கொண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், மதுரை மத்திய சிறையில் கட்டடத்தின் மீது ஏறி கைதிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், சிறைச்சாலை வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
கைதிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே, காயம்பட்ட கைதிகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதே நேரம், கைதிகள் யாரும் தப்பி விடக்கூடாது என்பதற்காக, மத்திய சிறைச்சாலை வாசலில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மத்திய சிறைச்சாலைக்கு செல்லும் வழிகள் முடக்கப்பட்டுள்ளன. போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். காவல்துறை உயர்அதிகாரிகள் விசாரணைக்காக சிறைச்சாலைக்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications