மதுரை அருகே டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த கும்பல் சிக்கியது… துப்பாக்கி முனையில் கைது செய்த போலீஸ்
Recommended Video
மதுரை: மதுரை அருகே துப்பாக்கி முனையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஒட்டுமொத்த கொள்ளை கூட்டத்தையும் தனிப்படையினர் பிடித்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் பாஸ்கர் என்பவர் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருப்பவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது சம்மந்தமாக போலீசார் சம்பவ இடத்தில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்ததிலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டு வந்தவர்கள் சுமார் 20 பேருக்கு மேல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து எஸ்பி உத்தரவு படி குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் வெவ்வேறு இடங்களில் சென்று குற்றவாளிகளை பிடிக்க தடயங்களை சேகரித்து மிகவும் திறமையாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தனிப்படையினரின் தீவிர முயற்சியால் மதுரை திருமங்கலம் பகுதியில் இருந்து கணபதி என்பவரை தனிப்படையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மேலூர் பகுதியில் உள்ள பாஸ்கர் வீட்டில் தமது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் போட்டு அதை செயல்படுத்தியதாகவும் அதற்காக தங்களுக்கு திருப்பூர் மற்றும் திருமங்கலத்தை சேர்ந்த 2 போலிஸார் ஆயுதங்களை கொடுத்து உதவியதாகவும் கூறினார்.
இதையடுத்து அனைத்து குற்றவாளிகளையும் பிடிக்க ஒரு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கணபதி மூலம் கூட்டாளிகள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரவழைத்து அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் அனைவரையும் இரகசிய இடத்தில் வைத்து நடத்திய விசாரணைக்கு பின் கொள்ளையடித்த 65,00,000 ரூபாய் மதிப்புள்ள பணம் நகை மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் மிகவும் அபாரமாகவும் புத்தி பூர்வமாகமாகவும் செயல்பட்டு குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து களவாடப்பட்ட பொருட்களை மீட்டதையடுத்து தனிப்படையினரை உயரதிகாரிகள் பாராட்டினார்கள்.