நடிப்பதுதான் திராவிட மாடலா? ஸ்டாலின் ஆய்வுகளில் கேமரா எப்படித்தான் கூட போகிறதோ? கேட்கிறார் அண்ணாமலை
மதுரை: சினிமா மாடல் போல் நடிப்பதே திராவிட மாடல் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் நடித்து வருவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மதுரை வந்த அண்ணாமலைக்கு, மாவட்ட பாஜக தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வரும் திராவிட மாடல் விவகாரம் குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் வைத்தார்.

எது திராவிட மாடல்?
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சியில் இருட்டு மட்டுமே நிலவி வருகிற்து. சினிமா மாடல் போல் நடிப்பதே திராவிட மாடல். முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் நடித்து வருகிறார். ஒவ்வொரு ஆய்வின் போதும், ஆளுங்கட்சி கேமரா மட்டும் எப்படி செல்கிறது என்றே தெரியவில்லை. பதுங்குவது பாய்வதற்கு என்று டயலாக் பேசிய 1967 முதல் கட்சி நடத்திக் கொண்டுள்ளனர் என்று கடுமையாக சாடினார்.

அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு
இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்களை விமர்சித்த அவர், திமுக அமைச்சர்கள் அனைவரும் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பணத்தை வாங்கி கொண்டு அதிகாரிகளை பணிமாற்றம் வழங்குகிறார். அதேபோல் நிதியமைச்சர் பிடிஆர், அவரிடம் பேசினாலே உடனே அவர் நான் யார் தெரியுமா, என் தாத்தா யார், என் முப்பாட்டானார் யார் தெரியுமா என பேசுகிறார். சோலார் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாயை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்சமாக வாங்குகிறார் என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

திமுகவின் வழக்கு
திமுகவினரின் ஊழல் பற்றி பேசியதற்காக மட்டும் ஒரே ஆண்டில் இதுவரை என்மீது ரூ.625 கோடிக்கு நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுகவும், திமுக அமைச்சர்களும் எத்தனை வழக்குகளை போட்டாலும், நான் பேசுவதை பேசிக்கொண்டு தான் இருப்பேன். தொடர்ந்து ஊழல்களை வெளியே சொல்லுவேன் என்று தெரிவித்தார்.

ஆதீனத்தை தொடுங்கள்
சேகர் பாபு எப்போது ஆதீனம் குறித்து தவறாக பேச தொடங்கினாரோ, அப்போதே கதை காலியாக போகிறது என்று அர்த்தமாகிவிட்டது. கோயில் பணம் மீதும், சாமிக்கு பின்வரும் உண்டியல் மீது திமுகவுக்கு கண் என்று மதுரை ஆதீனம் பேசியதில் எந்த தவறும் இல்லை. ஆதீனத்தை மட்டும் திமுக தொடட்டும். மதுரை மக்கள் என்ன செய்வார்கள் என்பது தெரிய வரும். ஆதீனத்துக்கும், பாஜகவும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்கள் பக்கம் ஆதீனம் இருப்பதால், நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications