மதுரை சரவணா ஸ்டோர்ஸ் வழக்கு.. அனுமதியின்றி இயங்குகிறதா ஃபுட் கோர்ட்? நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு!
மதுரை சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட இடைக்கால தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட இடைக்கால தடை கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் உரிய அனுமதியின்றி ஃபுட் கோர்ட் இயங்கி வருவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள லேக் ஏரியா பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட 10 மாடிகளை கொண்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வணிக கட்டிடம் புதிதாக திறக்கப்பட்டது.
இந்த சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 9 வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இரு நாட்களாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.37 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக காவல்துறை எஃப்ஐஆரில் பதிவிடப்பட்டிருந்தது. இதனிடையே உள்கட்டமைப்பு பணிகள் முழுமையடையாத சூழலில் கட்டிடத்தை திறந்ததே இந்த தீ விபத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே கட்டிடத்தை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

சரவணா ஸ்டோர்ஸ் விளக்கம்
அப்போது, கட்டிடத்தில் தீ விபத்து போன்ற அவசர காலக்கட்டங்களில் பாதுகாப்பதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
முழுமையாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகே சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் திறக்கப்பட்டது என்று சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு
சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தின் இந்த பதிலை கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளி சங்கர், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் உரிய அனுமதியின்றி ஃபுட் கோர்ட் இயங்கி வருகிறது என்று மனுதாரர் ஹென்றி திபேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications