நையாண்டி செய்வீங்களே.. சுயமரியாதை எங்க இப்ப? - திமுகவை ரவுண்டு கட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்!
மதுரை : எங்களை வழிநடத்திச் சென்ற ஜெயலலிதா காலில் விழுவதை நையாண்டி செய்தனர். இன்றைக்கு திமுகவின் சுயமரியாதை எங்கே போனது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் மேயர் ராமநாதன் உதயநிதி ஸ்டாலின் காலில் மேயர் அங்கியோடு விழுந்து வணங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இச்செயலை விமர்சித்துள்ளார்.
மேயர் அங்கியை அணிந்துகொண்டு சுயமரியாதையைக் காற்றில் பறக்கவிட்டு உதயநிதியின் காலில் விழுவதுதான் திராவிட மாடலா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலில் விழுந்த மேயர்
தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தூய்மைப்படுத்தும் வாகனத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மேயர் ராமநாதன் உதயநிதி ஸ்டாலின் காலில் மேயர் அங்கியோடு விழுந்து வணங்கினார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக எம்.எல்.ஏ உதயநிதி காலில் தஞ்சை மேயர் விழுந்தது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கோட்டை பக்கமே
இந்நிலையில், இந்த நிகழ்வை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதிமுக உள்ளது. ஏழைகளுக்காக 1972 -ஆம் ஆண்டு இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அவர் இருக்கும் வரை தி.மு.க கோட்டை பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை. ஜெயலலிதா காலத்தில் தேசிய அளவில் அதிமுகவை மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாக்கினார்.

சுயமரியாதை எங்கே?
எங்களை வழிநடத்திச் சென்ற ஜெயலலிதா காலில் விழுவதை கேலி, நையாண்டி செய்தனர். ஆனால், இன்றைக்கு திமுகவின் தன்மானம், சுயமரியாதை எங்கே போனது? தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் வந்தபோது அங்கு தஞ்சை மேயர் அங்கியுடன் சென்று உதயநிதியின் காலில் விழுந்துள்ளார். உதயநிதி கண்டிக்காமல் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டுள்ளார். காலில் விழுவதை விமர்சித்த திமுக, இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறது?

திராவிட மாடலா?
மூத்தவர்கள் காலில் இளையோர் விழுவது தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம். ஆனால் இன்றைக்கு வயதில் இளையோரிடம் மூத்தோர் காலில் விழுந்து சுயமரியாதையை காற்றில் பறக்கப்பட்டுள்ளது. இந்த புது கலாச்சாரம்தான் திராவிடத்தின் மாடலா? திராவிட மாடலில் சுயமரியாதை இப்படித்தான் அம்பலப்படுத்துகிறதா? நிச்சயம் இதை மக்களே கேட்பார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கேலிக்கூத்து
மேலும் பேசிய ஆர்.பி.உதயகுமார், முதல்வரின் வருகைக்காக புதிதாக சாலை போடுவது என்பது பாதுகாப்பு நடவடிக்கை. ஆனால், வேலூரில் கேலிக்கூத்தாக அங்குள்ள காளிகாம்பாள் தெருவில் இரவோடு இரவாக சாலைகளில் உள்ள குப்பைகளைக் கூட அகற்றாமல் சாலை போட்டுள்ளனர் என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications