முதல்வர் ஸ்டாலின் வெற்றியுடன் திரும்பி வருவார்.. சொல்வது யாரு? அட.. அ.தி.மு.க.வின் செல்லூர் ராஜு
மதுரை: 'பிரதமரை சந்திக்க டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றியுடன் திரும்பி வருவார் என நம்புவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தலைநகர் டெல்லி சென்றுள்ளார். முதல்வராக பதவியேற்ற பிறகு ஸ்டாலின் பிரதமரை நேரடியாக சந்திக்க இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இன்று மாலை பிரதமரை சந்திக்கும் ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து, 7 தமிழர்கள் விடுதலை விவகாரம், தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து விரிவாக பேச உள்ளதாக கூறப்படுகிறது.

கவனம் ஈர்த்த பயணம்
மேலும் மத்திய அமைச்சர்கள் சிலர், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருக்கிறார். முதல் பயணம் என்பதால் இது தமிழ்நாடு முழுவதும் மிகவும் கவனம் ஈர்த்துள்ளது. 'ஸ்டாலினை வரவேற்கும் டெல்லி' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

செல்லூர் ராஜூ பேட்டி
இந்த நிலையில் மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் தனது கட்சியினருடன் வந்து கோரிக்கை மனு அளித்தார். அப்போது நிருபர்களிடம் பேட்டியளித்த அவரிடம் முதல்வரின் டெல்லி பயணம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

வெற்றியுடன் திரும்பி வருவார்
அதற்கு அவர் கூறுகையில் , முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தோஷமாக டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வது, 7 தமிழர் விடுதலையை உறுதி செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் முதல்வர் ஸ்டாலின் வெற்றியுடன் திரும்பி வருவார் என்று நான் நம்புகிறேன்' என்று செல்லூர் ராஜூ கூறினார்.

மக்களுக்கு நல்லது தான்
தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- நாங்கள் பெற்ற பிள்ளைக்கு அவர்கள் பெயர் வைப்பது போன்று நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை அவர்கள்(திமுக) பெயர் சூட்டி இருக்கிறார்கள். எப்படியாக இருந்தாலும் பொது மக்களுக்கு பயன் கிடைத்தால் நல்லது தான். வடிவேல் காமெடி போல மதுக்கடை தொடர்பான முதலமைச்சரின் பேச்சு நகைச்சுவையாக இருக்கிறது. எதிர்கட்சி தலைவராக இருந்த போது டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக பேசியவர் , தற்போது ஆதரவாக பேசுகிறார்.

விவாதிக்க தயார்?
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் கூட்டுறவு சங்க தேர்தல் எங்களுடைய ஆட்சியில் நடை பெற்றுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத் துறை தொடர்பாக நேருக்கு நேர் அமர்ந்து விவாதிக்க நான் தயார். ஐ.பெரியசாமி தயாரா? என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார். சசிகலா ஆடியோ விவகாரம் பற்றி கேட்ட கேள்விக்கு தமிழகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை பேசுங்கள் என்று செல்லூர் ராஜூ கூறினார்.












Click it and Unblock the Notifications