ஓ.பன்னீர்செல்வம் விரிக்கும் வலை! நைஸாக நழுவும் செல்லூர் ராஜூ! கண்கொத்தி பாம்பாக எடப்பாடி பழனிசாமி!
மதுரை: எடப்பாடி பழனிசாமி முகாமில் இருந்து உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வை தங்கள் பக்கம் இழுத்தது போல், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை இழுக்கவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு காய் நகர்த்தி வருகிறது.
இதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட நிலையில் நைஸாக நழுவிச் செல்வதில் குறியாக இருக்கிறாராம் செல்லூர் ராஜூ.
இதனிடையே உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. ஐயப்பனை போல் இனி யாரும் ஓ.பி.எஸ்.பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கண் கொத்தி பாம்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளது.

அதிமுகவில் அதிகாரம்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே அதிமுகவில் யார் பெரியவர் என்ற அதிகார மோதல் உருவாகியிருப்பதால் அக்கட்சி கடந்த இரண்டு மாதங்களாகவே பரபரப்பாக இருந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கை ஓங்கியிருப்பதால் இப்போது அவரது தரப்பு சற்று உற்சாகமாக வலம் வருகிறது. அதே உற்சாகத்தோடு எடப்பாடி பழனிசாமி பக்கமிருந்து சில முக்கியப் பிரமுகர்களை ஓபிஎஸ் பக்கம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

செல்லூர் ராஜூ
அந்த வகையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து தாவி ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூவை ஓ.பன்னீர்செல்வம் பக்கம் அழைத்து வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டும் அவர் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக ஒதுங்கி வருகிறாராம். இருப்பினும் ஓபிஎஸ் டீம் சமுதாய பிரமுகர்கள் மூலம் தூண்டில் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறி மதுரைக்கு
ஆர்.பி.உதயகுமார் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து விமர்சித்து பேசுவதால் அவரது மதுரை மாவட்டத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுத்து தங்களின் பலம் என்ன என்பதை காட்ட வேண்டும் என்பதில் ரவீந்தரநாத் எம்.பி. உறுதியாக இருக்கிறாராம். இதனால் தான் ஆர்.பி.உதயகுமாரின் டோனில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் சசிகலாவை சின்னம்மா என்றும் தினகரனை அண்ணன் என்றும் குறிப்பிட்டாராம்.

என்ன நிலைப்பாடு?
இதனிடையே செல்லூர் ராஜுவை பொறுத்தவரை என்ன நிலைப்பாடு எடுப்பது என்பதில் மிகவும் குழப்பத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. ஐயப்பனை போல் இனி யாரும் ஓ.பி.எஸ்.பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு தென் மாவட்ட நிர்வாகிகளை கண் கொத்தி பாம்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications