தமிழ்நாடு தான் நம்பர் 1! வளர்ச்சியில் இல்லை.. லாக்கப் மரணங்களில்! மொத்தம் 25.. டேட்டாவோடு வந்த மாஜி
சென்னை: தென் மாநிலங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் ஸ்டாலின் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது எனவும், 2021 முதல் திமுக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தமிழகத்தில் இதுவரை 25 லாக் அப் மரணங்கள் நடைபெற்றுள்ளது எனவும், இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய்திறக்காதது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் பேசிய அவர்," தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? இல்லை காட்டுமிராண்டி ஆட்சியா? என்று கேள்வி எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்ல, தேசிய அளவில் நீதி கேட்டு ட்ரெண்டிங்காக உருவாகி உள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆட்சியில் இருப்பது காவல் நிலையமா? கொலை நிலையமா? என்று கேள்வி எழுந்துள்ளது. அரசு இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இதுகுறித்து ஸ்டாலின் பதில் சொல்ல முன்வரவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது. இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வு போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தகவல் வெளியிட்டது. அதில் லாக்கப் மரணத்தில் தென் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறியுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சத்தியவான் என்பவர் அழைத்து செல்லப்பட்டு அவர் உயிரிழந்தார்.
2021 செப்டம்பர் மாதம் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 2021 டிசம்பர் மாதம் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 2022 பிப்ரவரி மாதம் நெல்லை காவல் நிலையத்தில் சுலைமான் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 2022 ஏப்ரல் சென்னை தலைமைச் செயலாளர் காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
2022 ஏப்ரல் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் தங்கமணி என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 2022 ஜூன் பழைய கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்பு என்பர் அழைத்துச் செல்லப்பட்டு உயிர் இழந்தார். ஏற்கனவே 2022 ஆண்டு நடைபெற்ற சட்டசபை மானிய கோரிக்கையில் லாக்கப் மரணம் குறித்து எடப்பாடி பல்வேறு கேள்வி எழுப்பினர். ஆனால் உரிய பதிலை ஸ்டாலின் கூறவில்லை. எடப்பாடி கேட்ட கேள்விகளை கூட நேரடியாக ஒளிபரப்பு செய்யவில்லை
திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் எடுத்துக் கொண்டால் 2021 ஆண்டில் 2 மரணம், 2022 ஆண்டில் 4 மரணம், 2023 ஆண்டில் 7 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம் இதுவரை 25 லாக் அப் மரணங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளி வருகிறது. அதேபோல கடந்த 2025 மார்ச் மாதம் முத்துக்குமார் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடியார் கேள்வி எழுப்பும் போது உரிய பதில் இல்லை.
இன்றைக்கு அரசு வேடிக்கை பார்க்கிறதா? ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் கையாள தெரியவில்லையா? இல்லை சாகட்டும் என்று சாக்கு போக்கு சொல்லி இருந்து விடுகிறாரா? ஸ்டாலினுக்கு காவல் துறையை வழிநடத்த தெரியவில்லையா? இதே அதிமுக ஆட்சியில் இங்கிலாந்து ஸ்காட்லாந்துக்கு நிகராக தமிழக காவல்துறை இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் காவல்துறை பரிதாப நிலையில் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications