களம் ரெடி.. அலங்காநல்லூரில் 17ல் ஜல்லிக்கட்டு.. ஆயிரக்கணக்கில் மாடு பிடி வீரர்கள் முன்பதிவு
அலங்காநல்லூர்: உலக புகழ் பெற்ற அலங்காநல்லூரில் வருகிற 17- ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி மாடுபிடி வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.இதற்காக, 3 பகுதிகளிலும் வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்பதிவு தொடக்கம்
இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று நடந்தது. அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முன்பதிவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

மருத்துவ பரிசோதனை
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில், நீண்ட வரிசையில் நின்று இளைஞர்கள் காத்திருந்தனர். அலங்காநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் 10 மருத்துவர்கள் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

கட்டுப்பாடுகள்
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், 55 கிலோ எடை அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தகுதியில்லாதவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.

போலீசார் குவிப்பு
மாடுபிடி வீரர்கள் முன்பதிவையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கான முன்பதிவு நாளை நடக்கிறது.












Click it and Unblock the Notifications