திணறும் வட மாநிலங்கள்.. ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் மதுரையிலிருந்து.. உபி-க்கு அனுப்பி வைப்பு
மதுரை: ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சமாளிக்க உதவும் வகையில், ஆக்சிஜன் தயாரிக்கும் சிறிய ரக இயந்திரங்கள் மதுரையில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை மிக மோசமாக உள்ளது. நாடு முழுவதும் தற்போது 28 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் தங்களிடம் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாகத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. இந்த பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் அபாயகரமான நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், சிறிய ரக ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள் நேற்றிரவு மதுரையில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள் சுமார் 20 கிலோ எடை கொண்டவை. இந்த இயந்திரங்கள் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சுமார் 700 கிலோ வரையிலான திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யமுடியும்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் இது தொடர்பாக தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications