துவரங்குறிச்சி -நத்தம் -மதுரை சாலையில் நள்ளிரவு வழிப்பறி முயற்சி! அதிர்ச்சி விலகாத ஓட்டுநரின் ஆடியோ!
மதுரை: துவரங்குறிச்சி -நத்தம் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் வழிப்பறி கொள்ளை முயற்சி நடந்ததாக அதிர்ச்சி கலந்த ஆடியோ குரல் பதிவை வெளியிட்டுள்ளார் மதுரை பசுமலையை சேர்ந்த ஓட்டுநர் தினேஷ்.
திருச்சியிலிருந்து துவரங்குறிச்சி -கொட்டாம்பட்டி -மேலூர் -வழியாக மதுரை செல்லலாம். இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகம் என்பதால், தொலைநோக்கு பார்வையுடன் துவரங்குறிச்சி -நத்தம் - வழியாக மதுரைக்கு அண்மையில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. அதில் 7 கிலோ மீட்டர் மதுரையை ஒட்டி பறக்கும் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை தல்லாகுளத்தில் ஆரம்பிக்கும் இந்த சாலை ஊருக்குள் செல்லாமல் நேராக துவரங்குறிச்சியில் முடிகிறது. முற்றிலும் பைபாஸ் வழி என்பதால் ஆள் அரவற்றமாக சாலையாகவே இது காட்சியளிக்கிறது. பகலிலேயே போதுமான எண்ணிக்கையில் இன்னும் வாகனப் போக்குவரத்து இல்லை. இந்நிலையில் சென்னைக்கு சவாரி சென்றுவிட்டு டவேரா காரில் மதுரை திரும்பிக்கொண்டிருந்த ஓட்டுநர் தினேஷ், நள்ளிரவு 2.30 மணியளவில் நத்தம் பைபாஸை தாண்டி சத்திரப்பட்டி அருகே காரில் ஐந்தாறு கற்கள் வந்து விழுந்ததாக அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தாம் வாகனத்தை நிறுத்தவே இல்லை என்றும் மதுரை தமுக்கம் அருகே வந்து காரை நிறுத்தி இறங்கி பார்த்த போது, வழிப்பறி கொள்ளை முயற்சியில் காரை நிறுத்துவதற்காக கற்கள் வீசப்பட்டதை கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் மற்றொரு ஓட்டுநரும் சில நாட்களுக்கு முன்னர் நான்கைந்து சிறுவர்கள் டார்ச் லைட் அடித்து தனது வாகனத்தை நிறுத்த முயற்சித்ததாகவும் தாம் நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
பெனியல் பள்ளி அருகே மட்டும் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் மற்றபடி மதுரை -நத்தம் -துவரங்குறிச்சி சாலையில் ரோந்து போலீஸார் பணியமர்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வாகனப் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கினால் வழிப்பறி என்ற அச்சத்திற்கே இடமிருக்காது.












Click it and Unblock the Notifications