பாஜக, காங்கிரஸ் எங்கள் நண்பர்கள்.. எப்போது வேண்டுமானாலும் கூட்டணி.. மீண்டும் பரபரப்பை கிளப்பிய மாஜி!
மதுரை : பாஜகவும், காங்கிரஸும் எங்கள் நண்பர்கள் தான், எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான். பாஜகவும், காங்கிரஸும் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்." எனத் தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக உடனான கூட்டணியை டெல்லிக்குச் சென்று அமித் ஷா, நட்டா ஆகியோருடன் பேசி உறுதி செய்துவிட்டுத் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. முன்னதாக, பாஜக கூட்டணி தொடர்பாக அதிமுகவினர் பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக ஒரு தகவல் வெளியான நிலையில், அந்தச் சர்ச்சைகளுக்கு எல்லாம் டெல்லியில் நடந்த சந்திப்பால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும் கருத்து தெரிவித்தார் செல்லூர் ராஜூ. "நான்கைந்து படங்களில் நடித்த விஷாலே முதலமைச்சர் எனக் கூறி வருகிறார். பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்" என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளை கிட்டத்தட்ட செய்து முடித்து விட்டார் என்றும், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் அவர் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசத்தையும் வரவேற்றிருக்கிறார் செல்லூர் ராஜூ.












Click it and Unblock the Notifications