பட்டாக்கத்தியுடன் வந்த இருவர்.. 3 பைக்குகளில் ஒன்றை மட்டும் திருடியது ஏன்? மதுரையில் பகீர் சம்பவம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த புல்லட் பைக்கை மர்மநபர்கள் இருவர் லாவகமாக திருடிச் செல்லும் காட்சி இணையத்தை அதிர வைத்து வருகிறது.
திருட்டு, வழிப்பறி, கொள்ளை இவையெல்லாம் யாருக்கும் தெரியாமல் நடந்த காலம் போய் தற்போது அடித்து பறித்துச் செல்லும் காலமும் நடக்கிறது. பட்டப்பகலில் கழுத்தில் கிடக்கும் செயினை அறுப்பது, பொது மக்கள் கூடும் இடங்களில் வெட்டிச் சாய்ப்பது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
அது போல் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களையும் கார்களையும் பட்டப்பகலில் கூட லாவகமாக திருடிச் செல்வது என இருந்து வருகிறார்கள். அவ்வாறு திருடிச் செல்வோர் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கி விடுகிறார்கள்.

சைட் லாக்
வாகனங்களை சைட் லாக் செய்து வைத்திருந்தாலும் அதை எப்படியாவது நேக்காக ஓபன் செய்து திருடி வருகிறார்கள். இந்த திருட்டில் பல வினோதங்கள் நடந்துள்ளன. ஒரு காதல் ஜோடி புல்லட் வாங்க வேண்டும் என கூறி ராயல் என்பீல்டு ஷோரூமுக்குள் சென்றனர். அங்கு வாகனங்களை பார்த்த நிலையில் டெஸ்ட் டிரைவ் செல்ல வேண்டும் என கூறியிருந்தனர்.

கும்பல்
அவர்கள் வரும் போதே வேறு ஒரு ஜோடியுடன் கும்பலாக வந்ததால் கடைக்காரர்கள் இருவரும் ஒரே கோஷ்டி என நினைத்து டெஸ்ட் டிரைவ் செல்ல அந்த ஆணையும் அந்த பெண்ணையும் அனுமதித்தனர். பொதுவாக இது போன்ற சமயங்கள் கூட வந்த ஒருவரை ஷோரூமில் இருக்க சொல்லிவிட்டுதான் டெஸ்ட் டிரைவ் கொடுப்பர். ஆனால் இந்த காதல் ஜோடி கூட்டத்தோடு கூட்டமாக வந்து புல்லட்டை எடுத்துக் கொண்டு சிட்டாட்டம் பறந்தன.

காதல் ஜோடி
இதையடுத்து வருவார்கள், வருவார்கள் என பார்த்து புல்லட்டும் வராமல் காதல் ஜோடியையும் ஆளை காணாமல் இருந்ததாக ஏற்கெனவே ஷோரூமில் இருந்த மற்றொரு ஜோடியிடம் விசாரித்ததில் அவர்கள் யாரோ நாங்கள் யாரோ எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என கூறியதும் கடைக்காரர்களுக்கு பகீர் கிளப்பியது. இதையடுத்து புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மர்ம நபர்
அது போல் ஓசூரில் மர்ம நபர் ஒருவர் பட்டப்பகலில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் வாகனத்தின் லாக்கை உடைத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன. அதை வைத்து போலீஸார் மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை வலையப்பட்டியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடி செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

ஆய்வு
அதாவது ஒரு வீட்டின் முன் லேடீஸ் பயன்படுத்தும் வண்டி உள்பட 3 வாகனங்கள் நிற்கின்றன. அங்கு பட்டாக்கத்தியுடன் இருவர் வருகிறார்கள். சுற்றி சுற்றி பார்க்கிறார்கள். அதில் பளபளனு இருக்கும் புல்லட் வாகனத்தை இருவரும் "ஆய்வு " செய்கிறார்கள். அந்த வாகனத்திற்கு சைட் லாக் போடாதது போல் அந்த வீடியோவில் தெரிகிறது.

வாகனத்தை மெதுவாக எடுத்த நபர்
உடனே அந்த வாகனத்தை மெதுவாக வெளியே எடுத்து ஒருவர் அதில் அமருகிறார். மற்றொருவர் அந்த வாகனத்தை தள்ளுகிறார். வீட்டை பார்ப்பதற்கு ஏதோ கார்டன் இருப்பது போல் தெரிகிறது. மேலும் சிமென்ட்டால் ஆன ஒற்றை பாதையும் இருக்கிறது. எனவே கேட்டிற்குள்தானே இருக்கிறது என நினைத்து யாராவது பூட்டாமல் சென்றனரா என தெரியவில்லை.

போலீஸ் வலை
அப்படியே தள்ளிக் கொண்டே செல்கிறார்கள். இவர்கள் கையில் பட்டாக்கத்தி வைத்திருப்பதுதான் பயத்தை கிளப்புகிறது. பொதுவாக இது போன்ற சம்பவங்கள் திருட்டு நடக்கும் சப்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்கள் வெளியே வந்தால் அந்த பொருட்களை போட்டுவிட்டு ஓடிவிடுவது வழக்கம். ஆனால் என்ன ஆனாலும் சரி இந்த பைக்கை திருடியே ஆக வேண்டும் என சொல்லும் அளவுக்கு கையில் பட்டாக்கத்தியுடன் வந்திருக்கிறார்கள் என்றால், யார் வந்தாலும் வெட்டிவிட்டாவது பைக்கை திருடி செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications