விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: கன்னியாகுமரியில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதை எதிர்த்து தினகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நஞ்சை விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற சட்டவிரோதமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தினகரன் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்டது புத்தேரி ஊராட்சி. இந்த கிராமத்திற்கு உள்பட்ட நஞ்சை விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற சட்டவிரோதமாக அதிகாரிகள் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். அதன் காரணமாக அங்குள்ள விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

இதனால் அப்பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்பப்படுவதால், விவசாய பணிகள் தடைப்பட்டிருக்கின்றன. எனவே விவசாய நிலத்தையும், பாசன நீர் நிலைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக வீட்டுமனை அங்கீகாரம் அளித்ததை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு தினகரன் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நிஷாபானு, விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து நகர் ஊரமைப்பு ஆணைய இயக்குனர், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை கோதையாறு நீர்ப்பாசன உதவி செயற்பொறியாளர் ஆகியோர் 12 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்கள்..
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிரான தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்த செய்து செய்துள்ளது..
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தாமரைச்செல்வன், ரஞ்சித் சங்கர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறுகையில், "மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எங்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அறிவிப்பாணை அனுப்பி இருந்தனர். இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்கள்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் தனி நீதிபதி, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவர்களது பணி கிடையாது. எனவே மனுதாரர்களின் நிலத்தை கையகப்படுத்தும் அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய சாலை போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பணி சாலையை பராமரிப்பது, போக்குவரத்தின்போது வாகனங்கள் பாதுகாப்பாக செல்வதை முறைப்படுத்துவது ஆகியவையும் அடங்கும்.
அந்த வகையில் இந்த சாலையில் விபத்தை தடுப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள். இதனால் விபத்துகளை தடுக்க முடியும். விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தேசிய நெடுஞ்சாலையினரின் பணிகளில் ஒன்றாகவே கருத வேண்டும். எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications