பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு! காந்தி, வஉசி ஞாபகம் இருக்கா? பாஜகவினரை நீதிபதி கேட்ட கேள்வி
மதுரை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தேசிய கொடி பொருத்தப்பட்ட கார் மீது செருப்பை வீசியது தொடர்பான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதித் துறை அமைச்சராக இருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
தற்போது அவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கிறார். பல்வேறு விவாதங்களில் பங்கேற்று பாஜகவினருக்கும் அதிமுகவினருக்கும் டேட்டாவுடன் பதிலடிகளை கொடுத்தவர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் பணியில் இருந்த போது வீர மரணம் அடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையத்தில் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பாஜகவினர் சிலர் அவரது காரை வழிமறித்து போராட்டம் நடத்தினர். இதில் சிலர் தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் செருப்பை வீசி அடித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிஆருக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் சிலரை கைது செய்திருந்தனர். இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது செருப்பை வீசிய விவகாரத்தில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜகவை சேர்ந்த வேங்கை மாறன், மணிகண்டன், தனலட்சுமி, மாணிக்கம் உள்ளிட்ட 12 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கை ரத்து செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி புகழேந்தி, "ஒரு அமைச்சர் பயணிக்கும் போது அதிலும் அவருடைய வாகனத்தில் தேசியக் கொடி இருந்தது. அந்த வாகனத்தின் மீது செருப்பு வீசுவது என்பது தேசியக் கொடியை அவமதிக்கும் செயலாகும். அது மட்டுமில்லாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அமைச்சரை திட்டி கோஷம் எழுப்பி உள்ளீர்கள் என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் இந்த வழக்கை எப்படி ரத்து செய்ய முடியும்? என கேட்ட நீதிபதி, இந்த வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் முறையாக சந்திப்பதே சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையையும் ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, வ.உ.சிதம்பரனார், காந்தியடிகள் ஆகியோர் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைவில் கொள்வது அவசியம். அமைச்சர் ஒருவரின் தேசியக் கொடி மீது காலணி எறிந்த விவகாரத்தில் வழக்கை ரத்து செய்ய இயலாது. மனுதாரர்கள் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications